இளமஞ்சள் அலங்கரிக்கும் மரகத மாலை நேரமது! காற்றில் அமிழ்ந்த பூக்களின் நறுமணம் தென்றலோடு சரசமாடி மென் சாரலாய் அகமும் புறமும் தீண்டிட, கல்லூரி சாலையின் கல்மேடையில் அமர்ந்திருந்தவளின் மனதில் அவனது நியாபகமே!அவன்! அவனிடத்தில் அவள் அறிந்தது அவன் மட்டுமே! ஈர்ப்பை தாண்டி அவனிடம் அவள் அறிய ஒன்றுமில்லை. அவனை தூரத்தில் காணும் சில நொடிகள் போதும்! அதனால் உருவெடுக்கும் மகிழ்ச்சி போதும் அவளுக்கு! இதற்கு அப்பால் அவள் யோசனை சென்றதுமில்லை. அதற்கு தேவையில்லை என்பதே உசிதம்.
அவள் எண்ணத்தில் உலாவியவன், அவள் முன் நேரில் உதயமானன். அவள் பிரமிப்பில் படபடக்க, அவன் ரம்மிய சிரிப்பொன்றை சிந்தினான்.
அவன் "என்னைய பார்க்க வந்தியாம்?"
"நா நா நானா இல் இல்ல அப்டிலாம் இல்ல" முதல் முறை அவனருகில் நாபிறழ இமைதாழ்த்தி கூறினாள்.
அவன் "இல்லனு சொல்ல இவ்ளோ நேரமா?"
"அப்போ இருக்குனு சொல்ல வரிங்களா?" துடுக்குடன் அவள் கேட்க
"நா எப்போ அப்படி சொன்னேன்?" என அவன் கூறி மறைந்துபோனான். அக்கம் பக்கம் தலை திருப்பி தேட அவள் தீடிரென கண்விழித்தாள்.
காற்று முகத்தில் அறைய, முன்னுச்சி முடி நெற்றியில் கரை புரண்டது. பறக்க முயற்சிக்கும் துப்பட்டாவை இழுத்து கட்டுக்குள் கொண்டுவந்தாள்.
மூவர் அமரும் இருக்கையில் ஜன்னலோரம் அவள் அமர்ந்திருக்க, அருகில் ஒரு தாய் தன் குழந்தையை கொஞ்சி கொண்டிருந்தார்.
"படியில நிக்காதிங்க!... உள்ள போங்க! உள்ள போங்க!.. எல்லாரும் டிக்கெட்ட பத்திரமா வச்சிக்கோங்க!" என நடத்துனர் கத்தவே சுற்றம் உரைத்து, பேருந்தில் இருப்பது நினைவு வந்தது கீர்த்தனாவிற்கு.
அவன் வந்து போன காட்சி யாவும் கனவென புரிய, மானசீகமாக தன்னையே திட்டிக்கொண்டாள். மூச்சினை இழுத்துவிட்டு தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டாள். ஏனோ கனவில் வந்த படபடப்பு குறையாத உணர்வு. ஆனால், இந்த கனவு கூட தித்திப்பூட்டியது அவளுக்கு.