ஒவ்வொரு நாளும் விதவிதமான, புதிய, தரமான, வடிவான, வண்ண வண்ண உடைகளை அணிந்து கோண்டு, கன்னங்களிரண்டிலும் குழி விழ பொழிவுடன் பக்கவாட்டைப் பார்த்து சிலதில் சிரித்துக் கொண்டும் சிலதில் சிரிக்காமலும் ரீல்ஸில் வலம் வரும் எந்த ஒப்பனையுமில்லாத அழகி அவள். ஒரு முறை பார்ப்போரையெல்லாம் மறுமுறை பார்க்கத் தூண்டும் கூர்மையான காந்தக் கண்கள் அவளுக்கு.
_queen.of.fassssion_
இது தான் அந்த இன்ஸ்டாகிராம் ஐடி. எத்தனையோ ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஃபாலோவர்சில் அரைவாசிப் பேர் ஆண்கள். ஒரு பெண்கள் ஃபேஷன் பேஜை எந்தக் காரணத்துக்காக அவர்கள் ஃபாலோ செய்வார்கள்? அவர்களுக்கே வெளிச்சம்.அவளது கன்னக்குழி, காது மடல், கழுத்து வளைவு என்று வெவ்வேறு கோணங்களிலிருந்து எடுத்துப் போடப்படும் ஃபோட்டோக்களிலும், ரீல்ஸிலும் அவர்கள் தங்கள் மனதைத் தொலைத்திருந்தனர்.
ஆனால் எத்தனை ஆண்கள் மெசேஜ் செய்தாலும் ஒரு ரிப்ளை கூட வரவே வராது. அவர்களது மெசேஜ்கள் பார்க்கப்படவும் மாட்டாது. ஆண்களுக்கு மட்டும் தான் அப்படியென்று நினைத்தால், அது தான் இல்லை. பெண்களின் மெசேஜுக்கும் ரிப்ளை வராது.
அந்தப் பெண்ணின் பெயரோ, ஊரோ, விலாசமோ எதுவும் இதுவரையில் நிறையப்பேருக்குத் தெரியாது. ஆனால் அவளுக்கு எத்தனையோ விசிறிகள் எங்கெங்கோ இருந்தனர். கமென்ட்ஸில் உருகி உருகி வடிவதை வைத்தே அதைத் தெரிந்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட ஒரு ரசிகை தான் தமன்னாவும். அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிலுல்ல ஒன்றும் விடாமல் பார்த்து முடித்திருந்தவள், தனது தோழிகளிடம் சென்று அதைப் பற்றி புகழ்ந்து தள்ளுவதைக் கேட்பவர்களுக்கெல்லாம் தங்கள் காதில் இரத்தம் வராத குறை தான். அவள் சொல்வதைக் கேட்டு ஆர்வம் கோண்டு அவளது தோழிகளும் அந்தப் பக்கத்தைத் தேடிப் பார்த்து ஃபாலோ செய்து ஃபேன் ஆகி விட்டனர்.
அந்தப் பெண் எவ்வளவு கொடுத்து வைத்தவளாக இருக்க வேண்டும், அழகழகான, விலையுயர்ந்த உடைகளை வாங்கி அணியும் அளவுக்கு வசதி படைத்தவளாக இருக்கிறாள். அவற்றை வாங்கிக் கொடுப்பதற்கும் அவளுக்கு யாராவது இருக்கின்றனரே என்றெல்லாம் அவர்கள் பேசிக்கொண்டதுண்டு.