ஏனோ இன்று இந்த பயணம் அவளை நினைவூட்டுகிறது. சாளரம் தாண்டி வெயில் பொழிகிறது நகரும் பேருந்தில். இடமிருந்தும் விரும்பியே வெயிலில் நனைகிறேன். அவளும் இப்படித்தான்.
வெயில் நின்றபடி எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள். "எரும எதுக்கு இப்டி வெயில்ல நிக்குற" என்றேன். என் முகம் பார்த்து புன்னகைத்து "எனக்கு இந்த வெயில் பிடிச்சிருக்கு லூசு" என்றாள். அந்த புன்னகை அப்படியே என்னையும் வெயிலுக்குள் இழுத்துக் கொண்டது.
அவளுக்கு பேருந்து பயணங்கள் என்றால் பிரியம். ஒவ்வொரு பயணமும் அவளுக்கு புதிது. அதே வழி அதே தடம் அதே பேருந்தானாலும் சந்திக்கும் மனிதர்கள் வேறல்லவா.
மனிதர்களும் அவர்களின் முகங்களும் அவளுக்கு சொல்லும் கதைகள் ஏராளம். ஓர் பயணத்தில் ஒரு நூறு மனிதர்களென்றால் அப்பப்பா! எத்தனை மனிதர்கள்! எத்தனை கதைகள்! அவளுக்குள்!