நான் விவசாயி அங்கப்பன்... அலைக்கற்றையைப் பரப்பச் செய்யும் கோபுரத்தின் உச்சத்தில் நின்று கொண்டு மிச்சம் மீதி இருக்கும் இந்த வெறும் நிலத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்...
பிள்ளைப் போல் வளர்த்த என் தென்னம்பாலைகள் இன்று வளர்த்தவனை தனியாய் தவிக்கவிட்டு விட்டு போனதை எண்ணி வருந்திக் கொண்டு இருக்கிறேன்....
என் குடும்ப பாரம்பரியத்தைப் போல குருத்துவிட்டு வளர்ந்த என் வாழை மரம் இன்று அடியோடு சாய்ந்துப் போனது எப்படி என எண்ணிக் கொண்டு இருக்கிறேன்...
பூந்தோட்டம் வாடி காய்த்தோட்டம் கருகி என் பழத்தோட்டம் அழுகிப் போய் இன்று ஒன்றும் இல்லாமல் நிற்பது ஏன் என்று புரியாமல் தவித்துப் போய் நிற்கிறேன்...
அதோ அங்குத் தெரிகிறதே நீரில் மூழ்கி அழுகிக் கிடக்கும் அந்த நிலம் அது தான் என்னுடைய வயல்... அங்கு இருந்த ஒவ்வொரு நெல்லோடும் சேர்த்து நம்பிக்கையையும் விதைத்து, வானத்தைப் பார்த்து பூமியை அணைக்கச் சொல்லி இருவரும் கொள்ளும் கூடலை ரசித்து வேகமாக வளரும் நெல்மணியை கண்மணி போல் பாதுகாத்து இருந்த என் பயிர்களை எல்லாம் இந்த ஒரு நாள் புயலுக்கு தாரை வார்த்து கொடுக்கத் தான் இப்படி
அரும்பாடுபட்டு வளர்த்தேனோ??அதோ அங்கு ஒரு பெரிய குழி தோண்டி ஜே ஸி பி இயந்திரம் கொண்டு நான் வளர்த்த கால்நடைகளை எல்லாம் ஒரே குழியில் போட்டுப் புதைத்துக் கொண்டு இருக்கிறார்களே அதைப் பார்த்ததும் பொங்கி வரும் என் அழுகையை எங்கு சென்று அடக்குவேன்..
நான் ஆண்பிள்ளை அழக்கூடாது என்று சிறு வயதில் இருந்து சொல்லிக் கொடுத்த என் அன்னையின் சொல்லுக்கு அடிப் பணிந்து இந்த கண்ணீரை உள்ளுக்குள்ளேயே இழுத்துக் கொண்டு நின்று இருக்கிறேன் ஆனால் என்னை வளர்த்த அந்த தாய்க்கு தெரியவில்லை விவசாயியாய் இருந்தால் என்றாவது ஒரு நாள் தேக்கி வைத்த கண்ணீர் எல்லாம் கண்களை விட்டு மீறி வந்துவிடும் என்று...