ஒவ்வொரு நாவலை எழுதி முடிக்கும் போதும் அந்த நாவல் எழுதிய அனுபவத்தை ஒரு நிறைவுறையாக எழுத வேண்டும் என்று எனக்கு எப்போதும் தோன்றுவதுண்டு. தோன்றியதோடு சரி பெரும்பாலான நேரங்களில் நான் அதை செய்ததே இல்லை. சில நேரங்களில் சோம்பல் என்னை தடுத்துவிடும். பல நேரங்களில் ஏன் சொல்ல வேண்டும் என்ற ஒரு கேள்வி? அது எனக்கும் என் கதைக்குமான தனிப்பட்ட ரகசியமாக இருந்து விட்டுப் போகட்டுமே?!
ஆனால் என்னவோ இந்த நாவலை முடித்ததும் எனக்கு ஒரு நிறைவுறை எழுதி ஆகவேண்டும் என்று தோன்றிற்று. நிலாவின் பிரியன் நாவல் மேலோட்டமாக ஒரு சாதாரண கதைக்களம் போல தோன்றலாம்.
பிரிந்திருக்கும் கணவன் மனைவி எப்படி இறுதியில் சேர்கிறார்கள் என்பது தான் கதை. இது போன்ற களங்கள் நிறைய உண்டு எனும் போதும் அவை பெரும்பாலும் யதார்த்த சிக்கல்களை பேசுவதாக இல்லை. ஒரு வகையான ட்ரமாடிக் ரொமான்ஸ். அதை தான் வாசகர்களும் படிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள்.
ஆனால் இந்த நாவல் எதார்த்தமான உறவு சிக்கல்களை நேர்மையுடன் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்டது. இயல்பில் உணர்வுகளை நேர்மையாக எழுதுவது என்பதே சிக்கலான விஷயம்தான்.
அடிப்படையில் ஒரு ஆண் என்ன தவறு செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ள கூடிய வாசகர்கள் தான் இங்கு உண்டு. ஆணாதிக்க தனத்தை தூக்கி பிடிக்கும் பெரும்பாலான கதைகள் இங்குள்ள வாசகர்கள் பலரால் படிக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் கொண்டாடப்படும் வருகின்றன. ஒருமுறை கூட அதுபோன்று சமயங்களில் அந்த ஆணின் ஒழுக்கத்தை பற்றியோ செயல்களைப் பற்றியோ இங்கே யாரும் கேள்வி கேட்பதே இல்லை.
ஆனால் அதே காரியத்தை வேறொரு கதாபாத்திரம் செய்தால் அவனை தீட்டிதீர்த்துவிடுவார்கள்.
அதுவே நாயகன் செய்தால் அதற்கான நியாயப்படுத்தலை எழுத்தாளரும் கொடுக்கிறார் வாசகர்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில் எங்கிருந்து நாம் நேர்மையான ஒரு உணர்வை சொல்ல முடியும்.
அதுவும் நாயகனுக்கு இருக்கும் அதே சலுகை நாயகிக்கும் கூட கிடையாது இன்னும் கேட்டால் நாயகி என்பவள் தியாகியாகவோ ஒரு அப்பாவியாகவோ ஒரு குழந்தைத்தனமான பெண்ணாகவோ இல்லை ஒரு பெர்பெக்ட் மெட்டீரியல் ஆகுவோதான் இந்தக் குடும்ப நாவல் சமுதாயம் எதிர்பார்க்கிறது.
அப்படியே நாயகி எங்காவது ஏதாவது ஒரு தப்பு செய்துவிட்டால் அதற்காக அவள் மிகுந்த குற்றம்வுணர்வடைய வேண்டும். தீக்குளிக்காத குறையாக அவள் அந்த கதையில் சோதனைகளையும் தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும். பல தண்டனைகள் பல முறையான மன்னிப்புகளுக்கு பிறகு அந்தப் பெண் மன்னிக்கப்படுவாள் நாயகனால். வாசகர்களும் அதை தான் எதிர்பார்ப்பார்கள்.
அவ அப்படியெல்லாம் செஞ்சதால தான் இவ்வளவு கஷ்டப்பட்டா என்பதாகத்தான் பலரின் கருத்துக்கள் இருக்கும். ஆனால் இதே கருத்து நாயகனுக்கு முற்றிலுமாக மாறுபடும். அவன் எத்தனை மோசமான காரியங்களை செய்தாலும் வாசகர்கள் அவன் பக்கம் நிற்பார்கள். அவன் செயலுக்கு தண்டனையே கிடைக்கவில்லை என்றாலும் கூட அது அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்காது.
இந்த மனப்பான்மை இன்றுவரையிலும் இந்த நொடி வரையிலும் இங்கே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன் நானே சில ஆன்டி ஹீரோ கதைகளை எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம் பொங்கி எழாத என்னுடைய வாசகர்கள் அவனுடைய ஒழுக்கத்தை குறித்து கேள்வி எழுப்பாத வாசகர்கள் நாயகியின் நேர்மையற்ற செயலை மட்டும் கண்டிக்க குரல் எழுப்புகிறார்கள்.
பொதுவில் நாயகனின் நேர்மையற்ற செயல்களை இதுவரை கேள்வியே கேட்காதவர்கள் நாயகியின் செயலுக்கு மட்டும் கண்டனத்தை வைப்பது விசித்திரமாக இருக்கிறது.
ஆனால் எனக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு முறையும் நான் சில வாசகர்களை இழந்ததுண்டு. சில புது வாசகர்களை பெற்றதுண்டு.
சமூகத்தில் நடக்கும் எதார்த்த சிக்கல்களை உண்மைகளை அப்படியே எழுதும்போது இது போன்ற எதிர்ப்புகளை நான் மறைமுகமாக எதிர்கொண்டிருக்கிறேன்.
வெறும் சந்தோஷத்தையோ அல்லது துக்கத்தையோ மட்டும் உணர வைப்பது எப்போதுமே எனது கதையின் நோக்கமாக இருந்ததில்லை. அதையும் தாண்டி சிந்திக்க தூண்டுவது.
YOU ARE READING
அவனன்றி ஓரணுவும்
Fantasyஇயற்கையை காதல் செய். அது பன்மடங்காக உன்னை திருப்பி காதலிக்கும். இயற்கையை நீ அழிக்க செய்தால் அதுவும் பன்மடங்காக திருப்பி உன்னை அழிக்கும். 'கடைசி மரத்தையும் வெட்டிய பின்னர், கடைசி மீனையும் பிடித்த பின்னர் காற்றின் கடைசி துளியையும் மாசுப்படுத்திய பின...