அன்புள்ள மீராவுக்கு....
இந்த கடிதம் உன் கையில் கிடைக்கும் போது நான் உன் அருகில் இருக்க மாட்டேன்...
வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நான் இன்று உணர்கிறேன்..
கடந்த ஐந்து வருடங்களாக உனக்கு நான் எனக்கு நீ என்ற ஒரு அழகான வாழ்க்கை.. அது மீண்டும் கிடைக்காத என்று ஏங்குகிறேன்..
சில சமயங்களில் நான் பேராசை கொண்டவனோ என்று உனக்கு தோன்றலாம்..
ஆனால் அதுவே மறுக்க முடியாத உண்மை..
ஏன் நான் இன்று பொம்மையை தொலைத்து விட்டு அழும் சிறு குழந்தை போல் மாறினேன் என்று தெரியவில்லை...
நீ தினமும் வாசிக்கும் பகவத் கீதை வரிகள் தான் நினைவுக்கு வருகிறது...
எது இன்று உன்னுடையதோ அது நாளை வேறு ஒருவருடையது...
ஆம்.. நீ நாளை வேறு ஒருவருக்கு சொந்தமாக போகிறாய்..
மனம் அதை ஏற்க மறுப்பதேனோ....
என் வாழ்க்கையில் நான் இழந்த சந்தோஷங்களை நான் கடந்த சில ஆண்டுகளாக திரும்ப பெற்றுக் கொண்டேன்...
கடந்த ஐந்து வருடங்களாக உன் குரல் தான் என் சுப்ரபாதம்..
நீ தினமும் காலையில் போடும் காபி தான் என் தேவாமிர்தம்..
நீ போடும் வண்ணக் கோலங்கள் தான் என் வாழ்க்கையின் வர்ணஜாலங்கள்..
நீ செய்யும் ஒவ்வொரு செயலும் எனக்கு ராதாவை தான் நினைவூட்டும்...
உன் திருப்திக்காக நீ சமையல் அறையில் பாடும் பாடல்கள் என் ஆத்ம கீதங்கள்...
உன்னில் நான் அவளை காண்கிறேன்..
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் அவளின் நிழல்களோ என்னவோ ?!
அவளை நான் எவ்வளவு காதலித்தேன் என்று நீ நன்றாக அறிவாய்..
அவள் என்னை விட்டுச்சென்ற போது இனி வாழ்க்கையில் யார் மீதும் அன்பு வைக்க கூடாது என்று முடிவு செய்தேன்..
ஆனால் உன் மீது அன்பு வைக்காமல் என்னால் இருக்க முடியவில்லையே...
நீ அவளின் சாயலில் இருப்பதினால் என்னவோ என்னால் உன்னை வெறுக்க இயலவில்லை...
அது வரை இல்லாத ஒரு புது வித விதமான உணர்வு ...
நீ உன் படிப்பை தியாகம் செய்து என்னோடு வந்து சேர்ந்தய்..
தனிமையின் நிழல் என்னை பத்திரமாக பார்த்துக் கொண்ட நீ இன்று என்னை தனிமையில் தவிக்க விட்டுச் சென்றாய்...
ஏனோ இந்த தனிமை எனக்கு சுகத்தையே தருகிறது..
இந்த பிரிவும் ஒரு வகையில் ஆனந்தம் தான்..
இன்று நீ மீரா கிருஷ்ணன்...
ஆனால் நாளை ?
மீரா வாசுதேவன்...
இதை எழுதும் போது என் மனம் அடையும் பூரிப்பை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது..
நீ இன்று 25 வயது நிரம்பிய அழகிய பெண்ணாக என் கண் முன்னே வந்து நின்றாலும் , என் மனதிற்கு நீ இன்னும் நான் கையில் வாங்கிய அந்த பிஞ்சு குழந்தை தான்..
ஒரு தந்தையாக நான் உனக்கு என்ன செய்துள்ளேன் என்று எனக்கு தெரியவில்லை..
ஆனால் உன் தாயின் மறைவுக்குப் பின் நீ எனக்கு ஒரு தாயாக , மகளாக , தோழியாக , சகோதரியாக இருந்து என்னை கவனித்துக் கொண்டாய்...
இனி நீ உனக்காக வாழ வேண்டும்..
உனக்கென ஒரு குடும்பம் , கணவன் என அனைவரும் உள்ளனர்..
நான் இனி உன்னுடனே இருந்தால் அது இன்று உனக்கு சுகமாக தோன்றலாம்...
அது பிற்காலத்தில் சுமையாக மாறி உனக்கு சோகத்தை ஏற்படுத்தலாம்..
எனவே நான் எனது தங்கையுடனோ அல்லது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்ந்து என் வாழ்க்கையை நிறைவு செய்ய முடிவு செய்துள்ளேன்...
நீ நலமுடன் வாழ என் மன பூர்வ ஆசிகள்..
இப்படிக்கு
அப்பா 🖤
