பாகம் 28
இந்துவின் கண்கள், அர்ஜுனின் முகத்தில் வேரூன்றி இருந்தது. அவளிடம் அவன் தன் உரிமையை காட்டிய விதம், அவளுக்கு பிடித்து தான் இருந்தது. ஆனால், அவளுக்கு வேண்டியது அதுவல்ல. அவனுக்கு அவளிடமிருந்து என்ன வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அவனை மேலும் பரீட்சித்துப் பார்க்க அவள் விரும்பவில்லை. அவள் மனதில் இருந்த காதலை, அவனிடம் கொட்டி தீர்க்க தான் அவளும் நினைத்தாள். அவன் மனதை குளிர்விக்க வேண்டும் என்று தான் அவளுக்கும் ஆசை. ஆனால், அதற்குரிய வழிவகைகளையாவது அர்ஜுன் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்த்தாள். அதுவும் நியாயம் தானே...!
அவளை கட்டிலின் மீது கிடத்தினான் அர்ஜுன். எப்படியோ அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்து விட்டதில் அவனுக்கு மிகுந்த சந்தோஷம்.
"கம்ஃபர்டபிளா இரு. இல்லனா, மறுபடி உன் மாமியார் உன் கனவுல வந்து, உன்னை கேள்வி கேப்பாங்க" என்றான் மெல்லிய குரலில்.
"அவங்களுக்கு நான் புரியவைப்பேன். என்னை மாதிரி அவங்களும் ஒரு பெண்ணுங்கிறதால என்னை அவங்க புரிஞ்சுக்குவாங்க" என்றாள் தலையை குனிந்தபடி.
தன் கைகளை கட்டிக் கொண்டு புன்னகைத்தான் அர்ஜுன்.
"ஓ, அப்படியா...? எங்க அம்மா எப்பவுமே எனக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. அதை நீ மறந்துடாத"
"ஆனா அவங்களுக்கு என்னை பத்தி நல்லாத் தெரியும். ஏன்னா, எங்க ரெண்டு பேருக்கும் ஒரே இதயம்" என்று அவள் கூறியதை கேட்டு பேச்சிழந்து நின்றான் அர்ஜுன்.
தன்னை சுதாகரித்துக் கொண்டு, அவளை நோக்கி குனிந்தான்.
"அப்படின்னா, நீயும் எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கணும்"
"நான் எப்பவுமே உங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன்" என்று அவள் கூற நினைத்தாள்.
"நீ ஏதாவது சொன்னியா?" என்றான்.
"நான் எனக்குள்ளேயே பேசிக்கிட்டேன்"