02
தனது பணி முடிந்து வீடு திரும்பியவனை ஆர்பாட்டமாய் வரவேற்றது அவனது சகோதரியின் குரல். "உனக்காக தான் டா இன்னவரைக்கும் காத்துட்டு இருக்கேன். கிளம்பு, கிளம்பு. உன் மாமன வந்து என்னன்னு கேளு, எனக்கு ஒன்னுனா அவர கேட்க ஆளு இல்லனு தான அந்த ஆளு இத்தன ஆட்டம் ஆடறாரு. என் தம்பி இருக்கான்னு சொல்லிட்டு வந்துருக்கேன். நீ வந்து என்னன்னு கேளு டா" என அவசர அவசரமாய் அவனை அழைத்துச் செல்ல எத்தனித்தாள் உமையாள்.
"அவனே இப்போதான் வேல முடிஞ்சு களைப்பா வந்துருக்கான். அவன ஏன் டி இந்த பாடு படுத்துற. நாளைக்கு போய் கேட்டுக்கிட்டா போச்சு. நீ போய் ரெபிரஷ் ஆகு கண்ணா. உனக்கு டின்னர் ரெடி பண்றேன்" என தன் மகளிடம் ஆரம்பித்து மகனிடம் முடித்தார் கல்யாணி.
"அப்போ என் வாழ்க்கை எப்படி போனா என்ன? உங்களுக்கு அதப்பத்தின கவல இல்ல தான!" என கண்ணைக் கசக்க ஆரம்பிக்க, மதுரகவிக்கோ ஆயாசமாக இருந்தது. இது இன்று நேற்றல்ல சில வருடங்களாய் நடந்தேறும் வழக்கமான ஒன்று தான்.
"மாமாவ கேளு கேளுனு சொல்றியே, அப்போ நீ எதும் பண்ணல அப்படி தான க்கா?" என்றான் மதுரகவி.
"ஓ... இம்புட்டு நேரம் அமைதியா இருந்ததுக்கு காரணம் என்னை குத்தம் சொல்லத் தானா! அந்த மனுஷன் போன் பண்ணி விம்பார் போட்டு விளக்கிட்டாரோ" என எடக்குமுடக்காய் கேள்வி வந்தது உமையாளிடமிருந்து.
"அவரு எதுக்கு எனக்கு ஃபோன் பண்ணனும் கா? நீ இங்க வந்ததே இப்பத்தான் எனக்கு தெரியும். நீ ஏதாவது சொல்லி இருந்திருப்ப. அதான் அந்த மனுஷன் கோபப்பட்ருப்பாரு. அவரா இருக்கவும் இவ்ளோ பொறுமையா இருக்காரே, அத நினைச்சு சந்தோஷப்படு" என்றவன், "ம்மா... ரொம்ப பசிக்குது, சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணுங்க. நான் ரெபிரஷ் ஆகிட்டு வந்தறேன்" என தன் அறையை நோக்கிச் செல்ல, அவனையே பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள் உமையாள்.
சிறிது நேரத்தில் உணவு மேஜையில் அமர்ந்தவன், "அப்பா இன்னும் வரலயா மா?" என்றவாறே தனது தட்டில் பரிமாறப்பட்டதை உண்ணத் தொடங்கினான்.