இப்போது ஓய்ந்து விட்டது சுதந்திர தின கொண்டாட்டங்கள்.70 ஆண்டுகளைக் கடந்துவிட்டது நம் சுதந்திர இந்தியா. சுதந்திரம்...... அன்று பாரதியின் கனவு நேதாஜியின் வருங்கால பாரதம், பிறந்து 70 ஆண்டுகள் கடந்து விட்டன.
நெஞ்சில் தேசிய கொடி வீற்றிருக்க தேசிய கீதம் இசைக்கும் அந்த இரண்டு நிமிடம் நம்மை அறியாமல் இந்தியன் என்ற கர்வம் நம்மை ஆட்கொள்ளும். அடுத்த நாள், நம் நெஞ்சில் இருந்த அதே தேசிய கொடி வீதியில் கிடக்க அதை கண்டும் காணாதது போல் சென்று விடுகிறோம். ஒரு நிமிடம் குனிந்து அதை கையில் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டு அதை எடுத்து செல்ல நம்மில் பலர் தயாரில்லை. அவ்வாறு அந்த கொடியை எடுப்பவர், கண்டிப்பாக என்னை பொருத்த வரை கதாநாயகன்தான்.சரி கீழே விழுந்த கொடியை எடுப்பவரே கதாநாயகன் என்றால், அந்த கொடி கீழே விழாமல் இருக்க தன் இன்னுயிரை ஈந்தவர்களை என்னவென்று கூறுவது.
பல நடிகர்களின் வாழ்க்கை வரலாரையே அறிந்த நாம் இன்னும், யோகேந்தர் சிங், மனோஞ் குமார் பான்டே, விஜயன்ட் தப்கர் போன்றோரை அறியும் தேடலைகூட ஆரம்பிக்கவில்லை. தங்களை சமூகத்தின் கண்ணாடி என்றுக் கூறிக்கொள்ளும் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் கூட அவர்களை முறையாக அங்கிகரிப்பதில்லை.
எரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும், உறையும் பனியிலும் அவர்களைப் பற்றி எண்ணாமல், நாம் இரவு நிம்மதியாக தூங்க வேண்டும் என்பதற்காக கண் விழித்திருக்கும் அவர்களை பெரும்பாலும் நாம் மறந்து விடுகிறோம்.இன்னும் அவர்களுள் அனைவருக்கும் பாதுகாப்பான புல்லட் ஃப்ரூப் ஜக்கெட்டுகள் கூட இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சாய்சன் பனிப்பாறைகளில், கடந்த நாற்பது ஆண்டுகளில் மட்டும் 846 வீரர்கள் தங்கள் இன்னுயிரை தோட்டாகளால் அல்ல குளிரினால் இழந்துள்ளனர்.
நாம் இங்கு ஆடம்பர வாழ்வு வாழ, அவர்கள் நமக்காக அங்கு கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். அதற்காக நாம் தியாகம் எதுவும் செய்ய வேண்டியது இல்லை. அவர்களுக்கு நமது பிராத்தனைகளையாவது பரிசளிக்கலாம் அல்லவா. அவர்களை வணங்கவேண்டாம், மரியாதைக் கொடுக்கலாம் அல்லவா. நாம் இன்று குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பதற்கு, ஒருவரின் தனிமையே காரணம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
அவர்களை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.அவர்களுக்காக பிராத்தனை செய்யுங்கள்.
ஜெய் ஹிந்த்!