அவன் இரு கண்களும் கோபம் மற்றும் வலியால் சிவந்திருந்தன. அவனை சுற்றி ஓலமும் ஒப்பாரியுமாக கேட்டிட... அவனின் சிவந்த விழிகள் சிமிட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தன. அவன் இதயக் கோட்டையின் சொந்தக்காரி; இன்று தன் இதயத் துடிப்பை இழந்து கிடக்கிறாள்; அவளின் இரத்த வெள்ளத்தில்.
"நான் உன் மீது கொண்ட காதல் மெய் எனில்; நான் மீண்டும் பிறப்பேனடி இப்பூவுலகில்.. உன் விரல் பிடித்து... நிழலாக உன்னோடு வலம் வந்திட... இது நான் உன் மீது கொண்ட காதல் மீது ஆணையடி..." என்றவன் தன் கையில் இருந்த அந்த கூரிய ஆயுதத்தை அவள் குடியிருக்கும் இதயத்தில் படாமல் பாய்ச்சினான்.
"ஆஆஆஆஆ......"
ப்ரியாவின் குரல் அந்த இருட்டினை கிழித்துக் கொண்டு ஒலிக்க... அவள் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அர்ஜுன் சட்டென எழுந்து மின்விளக்கை இயக்கச் செய்தான். அவ்வறையின் இருள் விலகி அவ்வறை முழுதும் வெளிச்சம் பரவிட... தன் அருகே வியர்வையில் மூழ்கி வெற்றிடத்தை வெறித்துப் பார்த்தவாறு அலறிக் கொண்டிருந்த தன் மனைவியை தன் மார்போடு அணைத்தான்.
"ஸ்ஸ்ஸ்.... ஒன்னுமில்ல... நான் இருக்கன்ல்ல... " என்று ஆதரவாக அவளை அணைத்து அவளின் முதுகில் மெல்ல தடவி விட்டான்.
"ஏன் அர்ஜுன்... இந்த ஒரு வாரமா எனக்கு இப்டி கெட்ட கனவாவே வருது... அதுல என்ன கண்டேன்னு கூட எனக்கு ஞாபகத்துல இருக்க மாட்டேங்குது... ஆனா ஒவ்வொரு மொற கனவுக் கண்டு எந்திரிக்கும் போதுலாம்... அப்டியே என் ஒடம்ப உட்டு என் உயிர இழுக்குறமாரி இருக்குடா.." அவன் மார்பில் தன் முகத்தை புதைத்தவாறு கூறினாள்.
அர்ஜுன் ப்ரியா இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். ஐந்து வருட காதலும் மூன்று வருட திருமண வாழ்க்கையும் என எட்டு வருடங்களாக தங்கள் காதல் வாழ்க்கையில் எந்த இடையூறுகளும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை என்றபோதிலும் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதற்கு இன்னும் நாட்கள் உள்ளன என்று தங்களை தாங்களே சமாதான படுத்திக் கொள்வர். ஆனால் கடந்த ஒரு வாரமாக ப்ரியாவிற்கு வரும் இந்த கனவுகளே இவர்களின் மனதை கொஞ்சம் பாதிக்கிறது.