நீ விட்டுச் சென்ற பொழுதிலே
வானத்தில் பிறைதான் தேய மறந்ததோ
விண்மீன் தான் கண்சிமிட்ட மறுத்ததோ
உயிரினூடே நித்தம் பின்னுகின்றனவே எம்கனவுகள்
நெஞ்சிலே உதித்த உன் முகமானது
வெம் பஞ்சிலே நெருப்பெய்தது போல
உடலைப் பற்றவைத்து எள்ளி நகையாடுகிறதே
நீ சென்ற தூரமானது எனக்கு
இன்னும் புலப்படாத மர்மம் - உன்னை
மனத்தின் மூலையில் முடக்க எண்ணியும்
தோற்கும் இதயத்தை என்சொல்லி தேற்ற?
காருலாவி கண்ணீர் பொழிந்த வானை
அந்தி மாலையின் கொவ்வை தூரிகைக்கொண்டு
இடைவெளிக்கிடமில்லாது வெட்கச்சாயம் பூசி
இன்று பசலைச்சொட்ட எட்ட நிறுத்திவிட்டாய்
நீ தொட்ட இடங்கள் குளிராமல்,
என்று சுட்டெரிக்குமென காத்திருக்கிறேன்
கண்ணீரின் உப்பைக்கூட அவற்றை தீண்டவிடாது
அவை கடைவரை அனலாய் மாறாவிடின்
என்மனம் ஏற்குமோ உன்னைதான் இழந்ததை
இந்நாடகம் முடிந்து
திரைகளை நீ இழுத்துமூடிச் சென்றதை
உணரும் பொழுதில் கூட
இம்மாயைதான் கறையுமா, - இல்லை
உண்மையை ஏற்க இயலாது கற்பனையிலேயே
பித்துபிடித்து தான் நான் அலைவேனா