"ஷ்யாம், துர்க்கா எழும்பிக்கோங்க... இன்னைக்கு ஸ்கூல் முதல் நாள் சீக்கிரமா போகணும் தானே" என்று ருக்மணி தூங்கும் தன் இரு குழந்தைகளையும் மெதுவாக தட்டி எழுப்ப துர்க்கா முழிக்காமல் புரண்டு படுக்க ஷ்யாம் உடனே கண் விழித்து எழும்பி அமர்ந்தான்.
"அம்மா இன்னைக்கு நானே குளிச்சு சீக்கிரமா கிளம்பிருவேன். நீங்க பட்டுவை கிளப்புங்க. எனக்காக ஆகாஷும், லட்டு பேபியும் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. சீக்கிரமா மாமா வீட்டுக்கு போகணும். நான் ப்ரஷ் பண்ண போறேன்" என்று கத்தி கொண்டே பாத்ரூமிற்குள் நுழைந்தான் 7 வயது ஷ்யாம்.
"டேய் பார்த்துடா விழுந்திட போற" என்று ருக்மணி சொல்வதை அவன் காதில் வங்கியதாகவே தெரியவில்லை. தன் ப்ரஷை எடுத்து பேஸ்ட் வைத்து பல் தேய்க்க ஆரம்பித்திருந்தான்.
ருக்மணி அவனை பாத்ரூமில் சென்று பார்த்து விட்டு வரும்போது அறைக்குள் மாதவன் நுழைந்தார்.
"என்ன ருக்கு ஷ்யாம் எழுந்துட்டானா, எங்க காணோம்" என்று கேட்டவாறு துர்க்காவை எழுப்பும் பணியை செய்ய ஆரம்பித்தார்.
"ஆமாங்க பாத்ரூம்ல இருக்கான். அவனே கிளம்பிருவானாம்... ஒரே ஓட்டம் தான். இன்னைக்கு ஆகாஷும், மீராவும் ப்ரீகேஜி முதல் நாள் ஸ்கூல் போறாங்கல்ல அதுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டம்" என்று சிரித்து கொண்டே கூறினார்.
மாதவனும் "ம்ம், நீ இவங்க ரெண்டு பேரையும் கிளப்பு . நானே கூட்டிட்டு போய் பெருமாள் வீட்டில் விட்டுட்டு போறேன். அவன் அங்கிருந்து ஸ்கூலுக்கு கூட்டிட்டு போயிடுவான்" என்றார்.
"சரிங்க நானும் கூட வரேன்" என்று தன் மருமகள் முதல் நாள் பள்ளிக்கு போகும் அழகை பார்க்க ஷ்யாமை விட ஆசையாக கிளம்ப தயாரானார் ருக்மணி.
மாதவன் சிரித்து கொண்டே "அதானே பார்த்தேன்... எங்க என்ன சாக்கு கிடைக்கும் மருமகளை பார்க்க போகலாம்னு கிளம்பிடுவியே" என்று மனைவியை கிண்டலடித்தார்.
"என் மருமகளை நான் பார்க்க போறேன்... உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு. இப்படி பேசுற நீங்க தான் அவள் பிறந்த உடனே என் வீட்டு மருமகள் நீ தாண்டி செல்லம்னு கொஞ்சி, எங்க அண்ணனிடம் பிறந்த முதல் நாள் குழந்தையை 4 வயசு பையனுக்கு பொண்ணு கேட்டீங்க" என்று திரும்ப பதிலடி கொடுத்தார்.