போரின் தாக்கத்தாலும் எதிரி நாட்டு படைகளின் ஈவு இரக்கமற்ற செயலாலும் பசுமை கொஞ்சும் மகத நாடு செழிப்பிழந்து காட்சியளித்தது.. உணவுக் கிடங்குகளில் சேமித்து வைத்திருந்த தானியங்களும் குறைய ஆரம்பித்தன.. அங்கே வறட்சி நிலவுவதை கண்டு மகத நாட்டின் மீது பகைவர்களுக்கு இருந்த மோகமும் குறைந்தது.. மூன்று நாட்டு மன்னர்களும் ஒன்று கூடி காளிங்கன் என்ற விந்தாரா நாட்டின் சேனாதிபதியை மகத நாட்டினை மேற்பார்வையிடுவதற்காக நியமித்துவிட்டு தத்தம் நாடுகளுக்குச் சென்றனர்..
காளிங்கன் குணத்தில் மூர்க்கனாக இருந்தாலும் பெண்களை தாயாக மதிப்பவன். அதனால் அவர்களுக்காக நாட்டில் பல நலத்திட்டங்களைக் கொண்டுவந்தார்.. விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி பெண்களை அதில் ஈடுபடச் செய்தார்..அவரது கவனிப்பில் மகத நாடு இழந்த தன் பொலிவை கொஞ்சம் கொஞ்சமாக அடைந்து கொண்டிருந்தது அந்த எதிரிநாட்டு மும்மூர்த்திகளுக்கும் தெரியாமல்...
வருடங்கள் கரைந்தோடியது..
" இதோ பார்மகளே பெண்களுக்கு கல்வியறிவு என்பது மிகவும் அவசியம்.. அந்த அரிவாளை தூக்கி எறிந்து விட்டு கீழே வா " என்று கத்திக் கொண்டிருந்தார் கோதை தனது பத்து வயது செல்ல மகள் சமுத்ராவிடம்..அவளோ எனக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. என்பது போல் ஆலமரத்தின் கிளையில் ஏறி ஒரு கையில் அரிவாளுடனும் மறு கையில் மாம்பழத்துடனும் அமர்ந்து தன் பிஞ்சு முகத்தில் முகம் முழுவதும் மாம்பழச்சாற்றினை பூசிக் கொண்டு அருகிலிருந்த காகத்திடம் கதைப் பேசிக் கொண்டிருந்தாள்..ஆனால் அந்த காகமோ அவளுக்கு பதிலுரைக்காமல் அவள் கையிலிருந்த பழத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது..
" சமுத்ரா இங்கே வா.. உனது தோழிகளனைவரும் சென்று விட்டனர்.. வா மகளே " என்றார் கோதை..
" தாயே நான் அன்று சொன்னதுதான் இன்றைக்கும் .. ஆண்பிள்ளைகளுக்குத் தான் பிறரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும். பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதினை தெரிந்து கொள்ள ஏட்டுக் கல்வி அவசியம்.. அதே போல் தான் பெண்களுக்கும்.. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வீரம் வேண்டும்.அதனால் எனக்கு சண்டைப் பயிற்சி தான் வேண்டுமம்மா..ஆஆ ஊஊ " என்று அரிவாளை அழகாக வீசிக் காட்டினாள்..