அஞ்சலியையும் விபுவையும் வாசுதேவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை புரிந்து கொண்டான் உதயா.
வாசுதேவன் குடும்பத்தினர் விடைபெற்றுக் கொண்டதும் அஞ்சலியை காண அறைக்குள் வந்தான் உதயா.
உதயா குடும்பத்தின் அங்கமாக அன்பின் கூட்டுக்குள் ஒடுங்கி வாழ பழகிவிட்டிருந்த அஞ்சலியால்.. தங்கள் திருமணத்தை பற்றி உதயா சொன்னதும் கேள்வியும் குழப்பமுமாக தன்னையும் விபுவையும் பிறர் பார்ப்பதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதுவும் அவர்கள் உதயா குடும்பத்துக்கு வேண்டியவர்கள் என்பதால்.. அது மேலும் அஞ்சலியின் மனதை உறுத்தியது.
உதயாவுக்கு தான் தகுதியானவள் அல்ல.. என எண்ணிய அஞ்சலியால்.. உதயாவின் அன்பை இழக்க நேரும் என்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நினைத்து பார்க்கவே மனம் வலிக்க.. கண்ணீர் சிந்தினாள் அஞ்சலி.
“அஞ்சு என்னாச்சு எதுக்கு இப்ப அழுற..” என பதற்றமாக கேட்ட உதயா அவளருகில் அமர்ந்தான்.
அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டே அழுதாள் அஞ்சலி.
“அஞ்சு.. சொல்லு.. என்னாச்சு..” என பரிவாக கேட்டான் உதயா.
“உதி.. நா.. நான் உனக்கு வேண்டாம் உதி.. எல்லாரும் ஒரு மாதிரியா பார்க்கிறாங்க.. உ.. உனக்கு என்னைவிட ந.. நல்ல பொண்ணு கிடைப்பா உதி.. நா.. நான் உனக்கு வேண்டாம் உதி..” என அழுதபடியே சொன்னாள் அஞ்சலி.
உதயா பேசத் தொடங்கும் முன்னரே.. “வே.. வேண்டாம் உதி.. என்னைவிட்டு போய்டாத உதி.. எனக்கும் விபுவுக்கும் உன்னை விட்டா யாருமில்லை உதி.. வே.. வேண்டாம் உதி..” என தன் மனதின் உண்மையான நேசத்தையும் வெளிப்படுத்தினாள் அஞ்சலி.
“அவங்களுக்கு நம்மள பத்தி எதுவும் தெரியாதுல்ல.. அதனால தான் புரியாம பார்த்தாங்க.. வேற ஒன்னுமில்லை.. அஞ்சு.. இங்க பாரு.. இதுக்கெல்லாம் அழலாமா.. அழக்கூடாது.. சரியா..” என அவள் கண்ணீரை துடைத்தான் உதயா.