“அய்யோ.. இடுப்பெல்லாம் தெரியுதே.. எவ்ளோ இழுத்து விட்டாலும் இந்த தாவணி கீழ கீழ இறங்குதே..
எல்லாம் இந்த ஜானுவால வந்தது..தாவணி வேண்டாம்.. என்னோட பிங்க் சுடியை போட்டுக்குறேன்னு சொன்னா கேட்டாத்தான..
ஜானு உன்னை.. எல்லாம் அப்பா கொடுக்கிற செல்லம்..” தனக்குத்தானே புலம்பியபடி.. இடுப்பில் நிற்க மறுத்த தாவணியை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டு நடந்து சென்றாள் அவள்.
பதினாலு பதினைந்து வயது தான் இருக்கும்.. திருவிழா நாளின் போது சந்தித்தான் அவளை.
கொஞ்சம் குழந்தைத்தனமான முகம்.. அப்படியே அவன் நெஞ்சில் ஒட்டிக் கொண்டாள்.
சில பல வருடங்கள் கடந்துவிட்டது. ஒவ்வொரு வருடமும் ஊரில் திருவிழா வரும் போதெல்லாம் அவன் தூக்கத்தை பறிப்பாள் அந்த தேவதை.
ஆனால் அவன் விழிகளின் தேடலை அறிந்திராத அவளை அவன் மீண்டும் சந்திக்க முடியவில்லை.
அவள் நினைவு வரும் போதெல்லாம் ஏதோ பருவத்தின் ஈர்ப்பு.. காலப்போக்கில் மறந்து போகும் என்றே எண்ணினான். ஆனால் அவனுக்கே ஆச்சரியமாக இருக்கும்.. எத்தனையோ பெண்களை சந்தித்திருந்தாலும் இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவள் தன் நினைவை விட்டு அகலாத மாயம்.
வாழ்க்கை அவளை தன் துணையாக கொண்டு வந்து நிறுத்தும் என சில தினங்களுக்கு முன்பு வரை கூட கிருபா அறிந்திருக்கவில்லை.
அவள் பெயர் அதிதி என்பதையே இப்போது தான் அறிந்து கொண்டான் அவன்.
அவளது தற்போதைய புகைப்படத்தை கொண்டு வந்து நீட்டிய கிருபாவின் தாய் அபிராமி.. பெண் பார்க்க செல்லலாமா என கேட்க.. கிருபாவின் மனம் உற்சாகத்தில் துள்ளியது.
அவ்வப்போது தென்றலாய் வந்து மனதில் சிலிர்ப்பூட்டியவள்.. தன் வாழ்வின் துணையாக போகிறாளா.. அவளுக்கு என்னை பிடிக்குமா.. அவள் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வாளா.. என மனமெல்லாம் பரவசம்.