அங்கே பாசி படர்ந்த பழைய கிணறு ஒன்று என் கண்ணில்பட்டது. அதன் உள்ளே இருந்து ஏதோ ஒரு வித்தியாசமான ஒலி கேட்டது. என்னவாக இருக்கும் என்னும் ஆவலில் அருகில் சென்றேன். காலடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் அமைதி மேலும் குறைந்து வருவதை நான் கவனிக்க தவறவில்லை. ஒரு வழியாகக் கிணற்றின் அருகே வந்துவிட்டேன். உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆவல் சிறிதும் குறையாமல் குனிந்து கிணற்றுக்குள் என் பார்வையைச் செலுத்த சென்றேன்.
திடீரென என் சேலையின் முந்தானையை யாரோ பின்னிருந்து இழுத்தார்கள். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தேன். அம்மாவைக் காணாது ஏங்கிய கண்களோடு என் செல்ல மகன் என் முந்தானையைப் பற்றிக் கொண்டு நின்றிருந்தான். அடுத்த நொடி அவ்விடம் முழுவதும் சாதாரண நிலைக்குத் திரும்பியதையும் நான் உணராமலில்லை. ஏன் இந்தத் திடீர் சூழ்நிலை மாற்றம் என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தேன். "அம்மா......" என்று மீண்டும் என் முந்தானையை இழுத்து என்னைச் சுயநினைவுக்குக் கொண்டு வந்தான் என் மகன்.
"என்னடா செல்லம்? என்ன வேணும்?" என்றபடியே குனிந்து மகனின் தலையைக் கோதினேன். அந்தப் பிஞ்சு தன் முகத்தை மேலும் பரிதாபமாக வைத்துக்கொண்டு "உச்சா வருதுமா" என்றான். அந்த இளங்குருத்தின் முக பாவத்தைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "சரி சரி போகலாம்" என்று அவனை ஒரு கையால் அணைத்தபடியே அழைத்துச் செல்ல திரும்பினேன்.
அப்பொழுது என் பின்னால் கிணற்றின் பக்கம் இருந்து "கயல்.......!" என்று வித்தியாசமான குரல் கேட்டது. கிணற்றின் பக்கம் திரும்பிப் பார்த்தேன். "கயல்....!" இப்பொழுது எனக்குப் பின்புறத்திலிருந்து கேட்டது. ஆனால் முன்பு என்னை அழைத்த குரல், இக்குரல் இல்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது. "கயல்...." மீண்டும் அத்தையின் அழைப்பு.
(தொடரும்...)
ESTÁS LEYENDO
"கயல் விழியும் காதல் கணவனும்"
Terrorகாதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.