பெரியவர்கள் அந்த புறம் மும்முரமாய் புடவை தேர்வில் ஈடுபட்டிருக்க, இங்கே இவர்கள் பேசி முடிவெடுத்திருந்தனர்.
"அப்ப சரி அண்ணி, நீங்கள் சொன்ன மாதிரியே இவர் எனக்கு டிரஸ் வாங்கி தரட்டும் வாங்க போகலாம்!" என்று அவனை இழுத்தாள் அவந்திகா.
சரி என்று சம்மதித்த சியாம், அவநியை வெளியே கடைக்கு அழைத்து சென்று விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விடுவதாக மற்றவரிடம் விவரம் சொல்லி அவளின் கைப்பற்றி அழைத்துக் கொண்டு போனான்.
காரில் ஏறி அமர்ந்தவள் அமைதியாக வெளியே சாலையை வேடிக்கை பார்த்து கொண்டு வந்தாள்.
'நல்லவேளை... இந்த குழப்பத்திலும், குதூகலத்திலும் தன் கோபத்தை மறந்து விட்டாள் போலிருக்கிறது!' என்றெண்ணி புன்னகைத்துக் கொண்டான்.
"எந்த கடைக்குடா செல்லம் போகலாம்?" என்று கொஞ்சலாக வினவினான்.
"ம்..." என்று யோசனையோடு இழுத்தவள் ஒரு குறிப்பிட்ட கடையின் பெயரை சொல்லி அங்கே போகலாம் என்றாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் அங்கே காரை பார்க் செய்தவன் கீழே இறங்கி வரவும் சுவாதினமாக அவன் கைகளுக்குள் தன் கையை விட்டுக் கொண்டவள் அவனோடு உரசியபடி உற்சாகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அவளுக்குள் எந்த ஒரு உணர்வும் இன்றி வேடிக்கையாக நடந்துக் கொண்டாலும் ஏக்கம் கொண்ட சியாமினுள் தான் ஒருவித மின்னதிர்வையும், தாபத்தையும் அந்த தீண்டல் தூண்டிவிட்டது.
கிட்டதட்ட அரைமணி நேரம் அலசி ஒரு த்ரீபோர்த் டிரஸ்ஸை எடுத்தவள் திடீரென்று சந்தேகமாக அவனை தன்பக்கம் இழுத்து காதை கடித்தாள்.
"ஆமாம்... இந்த டிரஸ்ஸை உங்கள் ஊரில் போடலாமா இல்லை யாராவது ஏதாவது சொல்வார்களா?"
'எடுக்கின்ற வரை ஒரு சந்தேகமும் வரவில்லை இப்பொழுது கேட்பதை பார்!' என்று உள்ளுக்குள் சிரித்தவன், "நம் ஊரில் போட முடியாதுடா குட்டி, அதுவும் திருமணமான பெண் என்றால் நிச்சயம் புறம் பேசுவார்கள். வீட்டில் அப்பா, அம்மா எதுவும் நினைக்க மாட்டார்கள் தான் ஆனால் வேலையாட்கள் முன்னே நன்றாக இருக்காது. அந்த வீட்டின் இளவரசி அதற்கேற்ற ஆடையை அணிந்தால் தான் மரியாதையாக இருக்கும்!" என்றான் அவளுக்கு புரிவது போல்.

DU LIEST GERADE
அழகே அழகே... எதுவும் அழகே!
Aktuelle Literaturபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...