மறக்காதே நீ மறுக்காதே நீ - 26
இருபதாம் நாள்... (பாகம் - 1)மாலை மணி ஐந்து
சித்தார்த் செல்போனை எடுத்து சம்யுக்தாவை அழைத்தான்.
"ஹலோ சம்யுக்தா" என்றவனது குரல் சீராக இருந்தது.
"ஹாய்.." என்ற சம்யுக்தாவின் குரல் மெதுவாக ஒலித்தது.
"ஆபிஸ் முடிஞ்சவுடன் தாத்தாவோட சென்னை ஆபிஸுக்கு வா, உன்னோட பேசணும்" என்று சொல்லி விட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் வைத்து விட்டான்.
வருகிறாயா என்றால் கேட்டால் சம்யுக்தா வர மாட்டேன் என்று முறுக்கி கொள்ளலாம். இன்று அவளுடன் பேசியே தீர வேண்டும். இன்று பல விஷயங்களுக்கு முடிவு செய்து விட வேண்டும் என்று காலையில் படுக்கையில் இருந்து எழுந்திருக்கும் போதே உறுதி எடுத்திருந்தான்.
வேலையில் கவனம் செலுத்த முடியாமல் கண்ணாடி தடுப்பின் வழியே தெரிந்த வானத்தை பார்த்தான். வசந்தனுடன் சம்யுக்தா காரில் அன்று வந்தது நினைவில் வந்து போனது.
மாலை ஆறே முக்கால் மணி ஆகியிருந்தது. சம்யுக்தாவின் அலுவலகத்திலிருந்து தாத்தாவின் அலுவலகம் பத்து நிமிட தொலைவில் இருந்தது. கண்டிப்பாக இன்று அவனை பார்க்க அவள் வருவாள் என்று அவனுக்கு தெரியும். பிரச்சனைகளை பார்த்து பயப்படாமல் தைரியமாக அவள் எதிர்கொள்வாள் என்று அறிந்திருந்தான்.
அவனது செயலாளர் சம்யுக்தா வந்திருப்பதாக அலுவலக உள்பேசியில் சொன்னாள். அவளை உள்ளே அனுப்ப சொல்லி விட்டு கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சில விஷயங்கள் அவனுக்கு எப்போது பார்த்தாலும் அலுக்காதவையாக இருந்தன. அலை ஒடி வந்து மோதும் கடல், மெல்ல அசைந்து வரும் கருத்த யானை, இருண்ட வானில் மின்னும் நட்சத்திரங்கள், சிறு வயதில் அவன் ராதிகாம்மாவுடன் விளையாடும் வீடியோ பதிவுகள், மனதை நிறைக்கும் சம்யுக்தா.
கதவை சன்னமாக தட்டிவிட்டு உள்ளே வந்த சம்யுக்தாவை சிரிப்புடன் ஆழ்ந்து பார்த்தான். தனது உணர்வுகளை வெளிகாட்டாமல் இயல்பாக வைத்திருக்க அவள் முயல்வது தெரிந்தது.
ESTÁS LEYENDO
Completed - Marukkathe Nee Marakaathe Nee
RomanceSudum Nilavu Sudatha Suriyan - Part 2