சென்னை - விழுப்புரம் அரசு பேருந்து.
"அக்காக்கேத்த மாப்பிள்ள... எங்கிருக்கான் பயபுள்ள..." என்ற பாடல் அவள் காதுகளில் ஹெட்போன்ஸ் வாயிலாக செல்ல..
கூட்ட நெரிசல் கூச்சல்களே கேட்காத போது... நடத்துனர் அழைப்பது கேட்குமோ???ஜன்னல் ஓரம் வேடிக்கை பார்த்தபடி பாடலோடு பயணித்த அவள் தோள் தட்டி அழைத்தான் அருகில் அமர்ந்திருந்த மற்றோர் பயணி...
திரும்பி பார்த்து... 'என்ன' என்று தலை அசைத்து வினவ... அவன் நடத்துனரிடம் வழி நடத்த.. ஹெட்போன்ஸை அகற்றி பையில் பணம் துழாவினாள் பயணச்சீட்டு வாங்க...
"என்னத்த தான் சத்தமா கேப்பீங்களோ.." என்று வசவுபாடி அவளையும் பயணச்சீட்டையும் சேர்த்து கிழிக்க...
கடுப்பில் இருந்த அவளோ முறைத்தபடி தனக்குள் முணுமுணுத்தாள்...
"சத்தமா கேட்டா காது போய்டும்னு என் ஆத்தா சொல்லி... ஏன்... ஆண்ட்ரோய்டு சொல்லியே கேட்கல... நீ சொன்னா கேட்ருவேனா"... பயணச்சீட்டையும் சில்லரையையும் கைப்பையின் வெளி துவாரத்தில் திணித்த வண்ணம் முணுமுணுக்க....நடத்துனர் அகன்றார் கூட்டத்தை விலக்கி... அவள் மீண்டும் பாடலுக்குள் மூழ்கினாள்...
"கட்டம் கட்டமா தானே ஒரு சட்டை போட்டவன் வேணா... கட்டம் ஒன்னு நான் போட்டா அதை தாண்டி போரவன் வேணா" என்ற வரிகள் ஒலிக்க...
"எனக்கு மாப்பிள்ளையே வேணாங்கிறேன்... இது வேற"... எரிச்சலோடு பாட்டை நிறுத்தி கண் அயர்ந்தாள் கண்மணி.
கண்மணி... இன்ஜினியரிங் முடித்து கணிணி முன் அமர்ந்த பலருள் ஒருத்தி. வருடத்திற்கு 6 முதல் 7 லட்சம் வரை சம்பாதிப்பவள். தந்தை ரவிநந்தன் ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர். தாய் மாலினி வீடாளும் இல்லத்தரசி.
நடுத்தர வர்க்கத்திற்கு சற்று மேற்பட்ட குடும்ப சூழலாதலின் மகிழ்விற்கு குறை இல்லை.
நேர்மை தவரா யதார்த்தவாதி ரவிநந்தன் என்றால்... பொறுப்பான கண்டிப்பான தாய் மாலினி.
ஓரே மகளென்ற செல்லம் கூடாமலும், பூட்டி வைக்காமலும் கண்மணியை வளர்த்தனர்.
25 வயதை அவள் அடைய கடைமையை நிறைவேற்ற துடித்தனர் பெற்றோர். திருமணம் என்பதை ஏற்கும் பொறுப்பும் திறமையும் தனக்கில்லை என்பது கண்மணியின் கருத்து...
அது தானாக வந்துவிடும் என்பது பெற்றோர்... அல்ல அல்ல மாலினியின் வாதம்...
மாலினியின் வாதம் சரியெனினும் கண்மணியின் கருத்தையும் ஏற்றார் ரவிநந்தன்...
இப்போது... பிறந்த மண்ணான விழுப்புரம் விரைகிறாள் தாய் அழைத்ததால்.
அயர்ந்த கண் மலர்ந்தது... விழுப்புரம் வந்ததன் அறிகுறியில்... கைப்பையோடு இறங்கினாள் ஆயிரம் எண்ணங்களோடு.
வண்டியோடு நின்றிருந்தார் ரவிநந்தன். நேரே சென்று ஏதும் பேசாமல் வண்டியில் அவள் ஏற... சிரித்துக் கொண்டார் அவர்.
வண்டி வீடு நோக்கி பயணித்தது. பயண அலுப்பில் நெளிந்த அவள் நேரே சென்று சற்று உறங்க வேண்டும் என எண்ணியவாறே வீடு வந்தடைய... வாசலில் மாலினி அவள் இறங்கும் போதே "நேரா போய் பெட்ல விழாத! கை கால் கழுவிட்டு போ" என்றுரைக்க...
"என் மூளைக்குள்ள சிசிடிவி வெச்சிருக்கும் போல் ஆத்தா" என்று நினைத்தவாறு தாய் சொல் தட்டாமல் நடந்தாள். கை கால் அலம்பி விட்டு அப்படியே பள்ளி கொள்ள தொடர்ந்தாள் மாற்றுடை கூட மாற்றாமல்.
"இதெல்லாம் வச்சிட்டு", என்று தலையில் அடித்துக்கொண்டு சென்றார் மாலினி.