விழிமொழி: 5
கதிர் வீட்டைவிட்டு வந்ததும் புதிதாக ஒரு வீட்டை வாங்கத்தான் நினைத்தான். ஆனால், அது இமைக்கு பிடிக்கலைனா என தயங்கி ஒரு நல்ல வீட்டை பார்த்து, அனைத்தும் சரி செய்ய ஆட்களையும் நியமித்திருந்தான்.
இமை வந்து பால் காய்ச்ச, வீடும் தயாராகயிருந்தது.பெற்றோர்களிடமிருந்து இமை ஒதுங்கி, முடிந்த அளவுக்கு கஷ்டப்பட்டு தன் வேலையை தானே செய்துகொண்டாள்.
முகத்தை தூக்கி வைத்திருக்கும் மகளை பார்த்த சரண் அழகிக்கு வருத்தமாக இருந்தாலும், 'இப்படியே முகத்தை இவள் வைத்திருந்தாள் பார்ப்பவர்களுக்கு என்ன பதில் சொல்வது' என வருந்தி கணவன் மனைவி இருவரும் மெல்லிய குரலில் பேசியது, இமையா காதுகளுக்கும் கேட்கத்தான் செய்தது.
இமையா வருந்தினாள். ‘பேசிய வார்த்தைகள் எல்லாம் அப்பா அம்மாவை எப்படி எரித்திருக்கும்’ என வருந்தியவள்,
கோபத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு “ம்மா… ப்பா” என உடைந்த குரலில் அழைக்க, என்னவோ ஏதோ என இருவரும் இமையின் அறையை நோக்கி, பதற்றத்தில் ஓடி வந்தார்கள்.
“என்னாச்சிமா" என சரண் அருகில் வர, இமையா அப்பாவை அணைத்து
“சாரி அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்கக் கூடாது"
“எங்க மேலையும் தப்பு இருக்கு மா. உன் விருப்பமில்லாமல் நாங்க கட்டாய கல்யாணத்திற்கு ஏற்பாடு செஞ்சிட்டிருக்கோம். நீ பிறந்ததிலிருந்தே உன் வாழ்க்கை உன் கல்யாணம்னு எங்க இரண்டு பேருக்கும் நிறையவே கனவுகள் இருக்கு இமையா. எங்க அது எல்லாம் நடக்காம போய்டுமோனு பயம் வந்துடுச்சி அதான்" என்று தங்கள் நிலையை சரண் எடுத்து சொல்ல
“உங்க நிலை புரியுது மா. அந்த பையனுக்கு நல்ல பொண்ணு கிடைக்கும் ப்பா. என்ன போல ஒருத்தி எதுக்கு ப்பா” என்ன தான் தைரியமாக இமையா பேச துவங்கியிருந்தாலும் கடைசி வார்த்தை வாயிலிருந்து வெளியே வருவதற்கு முன் அழுகையில் வெடித்தாள்.