அத்தியாயம் : 01

2.7K 40 3
                                    

உன் காதல் மறுத்த 
வேளையிலும் என்னோடு 
நீ இருந்தாய்... 
இன்று என் காதல் 
சொல்லக் 
காத்திருக்கிறேன்... 
எங்கே நீயும் ஒளிந்து 
கொண்டாய்....?? 

நேரம் ஐந்து மணியையும் கடந்து வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தது...ஆனால் இப்போதும் அவன் வருவதாகத் தெரியவில்லை...எப்போதுமே அவன்தான் எனக்காகக் காத்துக் கொண்டிருப்பான்...ஆனால் இன்று வழக்கத்திற்கு மாறாக நான் அவனிற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன்... 

அதுவும் அவனிடத்தில் என் காதலைச் சொல்வதற்காய் காத்துக் கொண்டிருக்கிறேன்...ஏழு வருடங்களாய் அவனை ரொம்பத்தான் அலையவிட்டுவிட்டேன் போலும்...அதற்குத்தான் இப்போது சேர்த்து வைத்துப் பழி வாங்குகிறான்... 

அவனது இருபத்தியொராவது வயதில் என்னிடத்தில் அவன் காதலைச் சொல்லியிருந்தான்...அப்போது எனக்கு பதினெட்டு வயதுதான் ஆகியிருந்தது...பட்டாம்பூச்சியாய் சிறகடித்துப் பறக்கும் பருவமது...அவனது காதலுக்குள் கைதாகிட மனம் துடித்தாலும்,அந்த வயதில் காதலையும் என் கனவுகளையும் போட்டுக் குழப்பிக் கொள்ள நான் விரும்பவில்லை... 

அதனால் அப்போது அவனது காதலை நான் ஏற்றுக் கொள்ளவில்லை...ஆனால் அவனுக்குத் தெரியும் நான் அவனைக் காதலிக்கிறேன் என்று...அது உண்மைதான் அவனை எனக்கு மிகவும் பிடிக்கும்...என் வாழ்க்கையின் முழுப் பகுதியுமே அவனைச் சுற்றியதாகவே இருந்திருக்கிறது... 

மழலை வயதில் அவனது பிஞ்சுக் கைகளோடு என் பிஞ்சு விரல்கள் விளையாடிய போது உருவான நட்பு,பருவமெய்தி பாவாடை தாவணி அணிந்து அவனை நிமிர்ந்து பார்க்க முடியாது திணறிய போது அதற்கும் மேலான நேசத்தை எனக்குள் அறிமுகம் செய்து வைத்தது... 

அன்றுதான் நானும் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொண்டேன்,அவன் மேல் நான் கொண்டிருப்பது நட்பு மட்டுமல்ல,அதனுடன் இணைந்த காதலுமென்று...ஆனாலும் அவனிடத்தில் என் காதலை நான் காட்டிக் கொண்டதில்லை... 

அவனும் என் காதலைக் கண்டு கொண்டதாய் என்னிடம் வெளிப்படுத்திக் கொண்டதில்லை...என்னிடம் காதல் சொல்லி நான் மறுத்த போது என்ன சொன்னானோ,அதை இந்த ஏழு வருடங்களாக எனக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறான்...அதனாலேயே அவனை இன்னும் இன்னும் காதலித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றுகிறது... 

நெஞ்சோடு கலந்திடுWhere stories live. Discover now