அன்றைய நாளின் நினைவில் மனம் இன்றும் கனத்தது...என் பதிலில் அவன் அடிபட்டு நின்ற தோற்றமும்,என்னை வேதனையோடு பார்த்த அவன் விழிகளும் இன்றும் என் கண்களுக்குள் வந்து நின்று கண்ணீரைக் கடனாக வாங்கிக் கொண்டது...
அவனை எந்தளவுக்கு காயப்படுத்த முடியுமோ அந்தளவிற்கு அவன் மனதை நான் வார்த்தைகளாலேயே கொன்று புதைத்துள்ளேன்...இப்போது நினைக்கையில் எனக்கே என் மேல் கோபம் கோபமாக வந்தது...அதைத்தவிர அப்போது வேறு வழியும் இருக்கவில்லை
எனக்கு...ஆனால் இனி அவனை ஒரு விநாடியேனும் கலங்கவிடப் போவதில்லை நான்...இத்தனை வருட வலிகளுக்கும் என்னையே அவனிடம் மருந்தாக ஒப்படைக்க காத்திருக்கிறேன்...என் உள்ளத்தை கொள்ளையடித்தவனிடம் என் மொத்தக் காதலையும் கொட்டிவிடப் போகிறேன்...
நேரம் அதன் போக்கிலேயே கடந்து கொண்டிருக்க அவனுக்கான எனது ஏக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றது...அவனுக்கான காத்திருப்பில் மீண்டும் கிடைத்த இடைவெளியில் மனம் பழைய நினைவுகளைச் சுற்றி சிறகடிக்கத் தொடங்கியது...
அன்றைய தினம் என் இறுதி தேர்வு முடிந்து நான் வீட்டிற்கு வரும் போதே எனது தந்தையும் வருணின் தந்தையும் ஹோலில் அமர்ந்து கதைபேசிக் கொண்டிருந்தார்கள்...அவர்களுக்கிடையிலிருந்த ஆழ்ந்த நட்பு தானே எனக்கும் வருணுக்குமான அறிமுகத்தைத் தந்தது...
அவரைக் கண்ட மகிழ்வில் துள்ளிக் குதித்துக் கொண்டே அவரருகே சென்ற நான்,
"வாங்கப்பா...எப்படி இருக்கீங்க..??எப்போ அமெரிக்காவில இருந்து வந்தீங்க..??அம்மாவை கூட்டிட்டு வரலையா...??..."என்று என் கேள்விகளை அடுத்தடுத்து அடுக்கிக் கொண்டே சென்றேன் நான்...
வருணின் அக்கா திருமணமாகி அமெரிக்காவில் குடியேறிவிட்டார்...அவரின் முதற் குழந்தையைப் பார்ப்பதற்காகத்தான் வருணின் அம்மாவும் அப்பாவும் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தார்கள்...ஒரு வருடம் கழித்து இன்றுதான் மீண்டும் அவரைப் பார்த்ததால் என்னாலும் என் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை...
YOU ARE READING
நெஞ்சோடு கலந்திடு
Romanceஇரு உள்ளங்களின் அழகிய காதல் போராட்டம்... விலகி விலகிப் போகும் நாயகி, விலகாமலேயே தொடரும் நாயகன், இறுதியில் இரு மனங்களின் காதலும் ஒரு மனதானதா??என்பதே கதை..