எதிரிகள் என யாரும் கிடையாது அவளுக்கு. சிறுசிறு தவறுகளுக்கெல்லாம் சண்டையிடும் சிறுபிள்ளைத்தனமும் கிடையாது அவளிடம். வாழ்வில் சிற்சில சம்பவங்களால் ஆதங்கங்கள் இருப்பினும் சராசரி மனிதர்கள் போல அவற்றைக் கடந்துசென்றுவிடுவாள் பக்குவமாக. ஆயினும் ஐந்து வருடங்களுக்கு முன்பே கடந்து சென்றுவிட்டதாக நினைத்த ஒரு சம்பவத்தை, மீண்டும் நினைவில் காட்டவென ஒருவன் வருவானென அவள் எதிர்பார்த்திடவில்லை.
கல்லூரியில் அடுத்த இரண்டு வருடங்களுக்கு அவனைத் தவிர்த்துவிட்டாள் முழுவதுமாக. நடந்த சம்பவமும் சில மாதங்களில் நீர்த்துப்போனது. கல்லூரியில் அனைவருமே அதை மறந்துவிட்டனர். கீர்த்தியும்கூட அதை மறந்துவிட்டாள் கிட்டத்தட்ட. ஆயினும் மாறன் மீதிருந்த வெறுப்பு மட்டும் போகவில்லை மனதிலிருந்து.
கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, கிடைத்த முதல் வேலையை ஏற்றுக்கொண்டு சென்னை வந்துவிட்டாள். மூன்று வருடங்களில் எத்தனையோ மாறியிருந்தன. பழையபடி இயல்பான, தோழமையான குணம் திரும்ப வந்திருந்தாலும், எவரையும் எளிதில் நம்பிவிடுவதில்லை இப்போதெல்லாம். எனவே மனதால் எவரிடமும் நெருங்கவும் இயலவில்லை. ஆம், மாறனிடத்தில் வந்த உணர்ச்சிகள், வேறொருவனிடம் வரவில்லை இன்றுவரை.
அவனை நினைத்தபோது இதுவரை எங்கிருந்ததென்றே தெரியாத கோபமும் அழுகையும் வந்து அடிநெஞ்சில் கனன்றது. அவன் தன் வீட்டிலிருந்து நான்கடித் தொலைவில்தான் இருக்கிறான் என்ற எண்ணமும் அவள் நிம்மதியைக் குலைத்தது.
வாரநாட்கள் அனைத்தும் வேலை, அலுவலகம், ப்ராஜெக்ட் என்றே தீர்ந்திருக்க, பெரிதாக அக்கம்பக்கத்தினரிடம் அளவளாவிட நேரமிருக்கவில்லை அவளுக்கு. அவ்வப்போது மாறனை படிக்கட்டிலோ, வாகன நிறுத்தத்திலோ சந்தித்தாலும் முகம் பார்க்காமல் தலையைத் திருப்பிக்கொண்டு தன்வழியில் சென்றுவிடுவாள் அவள்.
ஆனால் மாறனிடம் காட்டும் பாராமுகத்தை மகதியிடம் காட்ட ஏனோ மனம் ஒப்பவில்லை அவளுக்கு. அவ்வப்போது அதேபோல சந்திக்கும் போதெல்லாம் சின்னதொரு சிரிப்பை இருவரும் பகிர்ந்துகொள்வர். சிலமுறை மகதிக்கென மிட்டாய்கள் கூட வாங்கித் தந்திருந்தாள் கீர்த்தி.
YOU ARE READING
முன்பனியா முதல் மழையா🌧🌨💙
Romancecute, sweet, and a little cliché... the perfect combination!