"ரதி... ப்ரீத்தி""ரதி... ப்ரீத்தி"
இருவரையும் இருமுறை அழைத்துவிட்டான். ஆனால், யாரும் வெளிவர வில்லை.
"என்ன பண்றீங்க ரெண்டு பேரும் உள்ள? ப்ரீத்தி... ரதி" என மூன்றாம் முறையும் அழைத்துவிட்டு வாசலில் நின்றான் தனாதரன். அவன் குரலில் அதீத உற்சாகம். ரதிநந்தனா, ப்ரீத்தி இவர்களின் நண்பனே இவன்.
ப்ரீத்தி "இதோ... வந்துட்டேன் வந்துட்டேன். கடன்காரன் மாதிரி வாசல்ல நின்னு கத்தாதனு சொன்னா கேக்குறியா நீ? ஹப்பா என்ன கத்து" என்றவள் கதவை திறந்தாள். கம்பிகள் உராயும் சரசரப்பில் தாழ் விட்டிருந்தது.
"கதவு திறந்தாச்சு உள்ள வா தரன்" என அழைத்தவள், அவன் முக பிரகாசத்தை கண்டிருந்தாள்.
"நான் உள்ள வரது இருக்கட்டும் நீங்க ரெண்டு பேரும் வெளில வாங்க. உங்களுக்கு ஒன்னு காட்டணும். சர்ப்ரைஸ் காத்திருக்கு" என்றான் மகிழ்வுடன்
"ஹேய் அப்படி என்ன சர்ப்ரைஸ்? சரி சரி இரு ரதி தூங்குறா. அவளையும் கூட்டிட்டு வரேன்" என உள்ளே போன ப்ரீத்தி மதிய தூக்கத்தில் இருந்த ரதியை எழுப்பி அழைத்து வந்தாள்.
அதற்குள் தரன் சாலை வாசலுக்கு சென்றிருந்தான்.
கேள்வி கேட்ட ரதியிடம் "ஏதோ சர்ப்ரைஸாம்!" என்றே கூறியிருக்க, இருவரும் வாசலுக்கு வந்தனர்.
சாலையை விட்டு இறங்கிய மண் தரையில் அழகாய் நின்றது தரன் கூறிய அந்த சர்ப்ரைஸ்! புதிதாய் வாங்கிய மினுமினுப்புடன் கருநீல நிற Maruti Swift.
உண்மையிலே அப்பெண்களுக்கு இன்ப அதிர்வு தான். ஏனனில், இது தனாதரனின் பலநாள் ஆசை. கல்லூரி காலத்திலே இந்த காரை வாங்க வேண்டும் என நிறைய பேசியுள்ளான். ஏனோ தெரியவில்லை இந்த கார் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆசை. இதோ வாங்கிவிட்டான்! தன் இணைக்கு ஒரு இன்பம் என்றால் அதை இரட்டிப்பாக வழங்குவதே நட்பின் தலையாய கடமை அல்லவா! அந்த கடமையோ இந்த தோழிகளின் இடத்தில் மகிழ்ச்சியாய் வந்தது.