ரதிநந்தனா சென்றவுடன் தரன் அலைபேசி எடுத்து ப்ரீத்திக்கு அழைப்பு விடுத்தான்."என்ன தரன் பேசிட்டியா?" எடுத்ததும் கேள்வி கேட்டாள். தரனிற்கும் ரதிக்கும் நடுவினில் செல்லும் பேச்சு வார்த்தை பற்றி ப்ரீத்தி அறிந்திருந்தாள்.
"பேசினேன்" ஒற்றையாய் பதில் தந்தான் தரன்.
ப்ரீத்தி "என்ன பேசின? உன் குரல்ல சுரத்தே இல்ல. அவ முடிவுல ஸ்ட்ராங்கா இருக்கா போல"
"ஆமா ப்ரீத்தி. அவ பிடிகொடுத்து பேசமாட்டேங்குறா. என்னால ரதிய வற்புறுத்த முடியல" அவனது குரலில் இயலாமை தெரிந்தது. அதுவே ரதிநந்தனாவை சம்மதிக்க வைக்க தூண்டியது.
அவனே தொடர்ந்து இன்று நடந்ததை ஒன்றுவிடாமல் கூறி முடித்து "ப்ரீத்தி எனக்கு சப்போர்ட் பண்ணி அவகிட்ட பேசி பாரு" என்றான் கெஞ்சல் போலும்.
இருவரும் நண்பர்களாக இருக்க, ஒருபக்கம் பேசுவது மற்றொருவரை அவ்வகையில் அந்நியப்படுத்தும். அவ்வாறு இருந்தாலும் பரவாயில்லை என ப்ரீத்தி, தரன் பக்கமே பேசுவாள். அதற்கு ஒரு காரணம் உண்டு. ரதியும் தரனும் சேர்ந்துவிட்டால் மூவரணி நட்பு என்றும் கலையாது, ரதியும் தன்னைவிட்டு அதிக தூரம் போகமாட்டாள் என்பது ப்ரீத்தியின் எண்ணம். மொத்தத்தில் இந்த பேச்சு வார்த்தையில் தலையீடு இல்லாமலே மறைமுக பாதிப்பு உண்டு என்றால் அது ப்ரீத்திக்கு தான். ரதிநந்தனா சிறுவயது முதல் தோழி என்றால், தரன் கடந்த ஐந்து வருடத்தில் முக்கிய நபராக மாறி இருந்தான்.
"சரி பேசறேன் தரன்" என கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
பணி முடிந்து காலையில் வீட்டிற்கு சென்ற ப்ரீத்தி, தரன் கேட்டது போல் பேசவும் செய்தாள். ஆனால், பேசுவதற்கு முன், ரதியிடம் கேட்பதற்கு அதி முக்கியமான கேள்வி ஒன்றிருந்தது. கேட்டாள்.
ப்ரீத்தி "நேத்து பார்க்ல யார் ரதி அந்த தெரிஞ்சவங்க? அதுவும் எனக்கு தெரியாம"
ரதிநந்தனா மருத்துவமனைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். அவளுக்கு பகல் ஷிப்ட்.