மறுநாள் காலை பரீட்சைக்குச் செல்லத் தயாரான துருவ் தன் அலமாரியை திறந்து அதனுள்ளிருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தான்.
அதனைக் கண்கள் கலங்க நோக்கிய துருவ், "இந்த லைஃப் நீங்க கொடுத்தது... நிச்சயம் உங்க ஆசையையும் கனவையும் நான் நிறைவேத்துவேன்..." என்றவன் அப் புகைப்படத்தை இருந்த இடத்திலேயே பத்திரப்படுத்தினான்.
துருவ் அறையிலிருந்து வெளியே வர அவனுக்காக ஹாலில் காத்திருந்தான் ஜெய்.
ஜெய், "போலாமாலே..." என்க, "அம்மா கிட்ட சொல்லிட்டு போலாம்டா.." என துருவ் பதிலளிக்கும் போதே அங்கு வந்தார் அலமேலு.
அலமேலு, "எலேய்... ரெண்டு பேரும் சக்கரை சாப்பிட்டு போலே... அப்போ தான் பரீட்சைய நல்லா எழுத முடியும்..." என்கவும்,
"ஆத்தா.. நெசமா தான் சொல்லுறியலா... அப்போ அந்த சக்கரை டப்பா முழுசா நானே காலி பண்றேன்... குடு ஆத்தா..." எனக் கண்கள் மின்னக் கேட்டான் ஜெய்.
ஜெய்யின் பேச்சில் துருவ் சிரிக்க, ஜெய்யை முறைத்த அலமேலு, "வால சுருட்டிட்டு இருலே... வந்துட்டான் முழுசா சக்கரைய காலி பண்ண..." என்றவர் ஒரு கரண்டி சர்க்கரையை அவன் வாயில் திணித்தார்.
துருவ்விற்கும் சிறிதளவு சர்க்கரையை ஊட்டி விட்ட அலமேலு, "கண்ணுங்களா... ரெண்டு பேரும் பரீட்சைய நல்லா எழுதணும்லே... துருவ் கண்ணா... நீயி இந்த பரீட்சையில பாஸ் ஆகி உங்க ஐயன் ஆசை படியே பெரிய கலெக்டர் ஆகணும்லே..." என கண்கள் கலங்கக் கூற,
துருவ், "மா... ஏன்மா இது... நான் கண்டிப்பா ஒழுங்கா எக்சேம் எழுதுவேன்... பார்க்க தானே போறீங்க... உங்க பையன் எப்படி சைரன் வெச்ச வண்டியில வரப் போறான்னு.." என்றான் புன்னகையுடன்.
அப் புன்னகை அலமேலுவையும் தொற்றிக் கொள்ள, "என் மயேன் ஆசைப் படியே எல்லாம் நல்லபடியா நடக்கணும்லே... யாரு கண்ணும் என் புள்ளைங்க மேல பட்டுடக் கூடாது..." என இருவருக்கும் நெற்றி வழித்து திருஷ்டி கழித்தார்.
சரியாக அங்கு முத்துராசுவும் எங்கோ செல்லத் தயாராகி கஜாவுடன் வர, துருவ் ஜெய் இருவரும் அவனைக் கேள்வியாக நோக்கினர்.
YOU ARE READING
மாயம் செய்வாயோ!!! (முடிவுற்றது)
Mystery / Thrillerஉலகம் எவ்வளவு நவீனமயமாக்கப்பட்டாலும் நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் ஜாதி என்ற பெயரில் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் கதையில் சில மக்கள் இன்னும் ஊறிப் போயிருக்கும் ஜாதி வெறியினால் நடக்கும் வன்முறைகளும் அதனால் மக்கள் படு...