இன்றைக்கு என் வாழ்க்கையில் முக்கிய நாள், மிக மிக முக்கிய நாள். இந்த நாள் எப்படி இருக்குமென்று நான் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால் இப்படி இருக்குமென ஒருமுறை கூட தோன்றியது இல்லை. இத்தனை சுகமாக இத்தனை சாந்தமாக இந்நாள் இருக்குமென நான் எண்ணியதே இல்லை,
மணி இப்போது 12, அக்கம் பக்கத்து வீட்டார் அனைவரும் உறங்கி விட்டனர். இது தான் சரியான சமயம்.. அடடே.. இதை மறந்தேன் பாரு.. என் கணவர் செல்லமாக கொட்டு வைக்கவும் தான் நினைவுக்கு வந்தது, ஒரு கடிதம் எழுதி வைக்க வேண்டுமே, இல்லையெனில் என்னால் அனைவருக்கும் துன்பமாகி போகும்.
ட்ராயரை திறந்து அதிலிருந்த என் டைரியை எடுத்தேன். அதில் மை காணாத காகிதத்தை கிழித்து எழுத அமர்ந்தேன், பேனா.. பேனாவை எங்கே.. அதையும் மறந்தேனா..
" என்னங்க. அந்த பேனாவை கொடுங்க.. "
அடுத்த நிமிடம் கேட்டதை மடியில் சேர்த்தார் கணவர், மறைத்த சிரிப்புடன் எழுத தொடங்கினேன்.
அன்பு தோழி வனிதாவிற்கு,
எனக்கு நீ செய்த உதவியெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. குறிப்பாக என் கணவர் இறந்த இந்த ஒரு வாரத்தில், நீ எனக்கு காட்டிய பரிவிற்கும், பாசத்திற்கு எல்லையே இல்லை. இருந்தும் என் கணவர் நினைவால் நான் நிதமும் மனதிற்குள் அழுதுட்டு தான் இருந்தேன், ஆனால் இப்போ நான் அழவில்லை, இனி எப்போதும் அழ மாட்டேன்.
ஏன்னு தோணுதா..
என் வினோத் என்னிடமே வந்துட்டார்.
என்ன .. நான் முட்டாளாயிட்டதா தெரியுதா.. உன்ட சொல்லணும்னு தான் நெனச்சேன், ரெண்டு நாள் முன்னாடி ஓஜா போர்டு மூலமா இறந்த என் வினோத்துட்ட பேசலாம்னு சொன்னப்போ.. நீ பயந்து போய் என்னை திட்டுனியே.. அதான் உன்கிட்ட சொல்லலை, நான் ஓஜா போர்டு யூஸ் பண்ணி அவரை கூப்பிட்டேன், அவரும் வந்தாரு.. இப்போதும் என் கூடயே தான் இருக்காரு..
ஆஹா. சொன்னா நம்ப மாட்ட.. இப்போ கூட என் கன்னத்தை கிள்ளிட்டு போனார்.