அது யாருக்காகவும் எப்போதும் காத்திருப்பதில்லை. யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும், வாழ்ந்தாலும் மடிந்தாலும், தனக்காெரு கவலையுமில்லையெனும் நினைப்போடு தன் பாடே என்று நகர்ந்து கொண்டிருக்கும் அது 'காலம்'.
'காலம் செய்த கோலம்' என்று அடிக்கடி பலரும் சொல்வார்கள். அதில் பொதிந்துள்ளது எவ்வளவு பெரிய உண்மையென்று யோசித்துப் பார்க்கும் போது நன்கே விளங்கிற்று அய்லாவுக்கு. தனக்கு விளக்கம் தெரிந்த வயது முதல் தன் வாழ்வில் நடந்த ஒவ்வொரு சம்பவமாக மீட்டிப் பார்த்தாள்.
மீஸானும் அஸாராவும் அவளைக் கைகளில் ஏந்தக் கொண்டு சோறு ஊட்டி விடுவதாகவும், கை பிடித்து கடைக்குக் கூட்டிச் சென்று சாக்லேட் வாங்கிக் கொடுப்பதாகவும், மழை நாள் வீதியில் சறுக்கி முகம் குப்புற விழுந்த போது தூக்கித் தடவி மருந்திடுவதாகவும் ஒவ்வொரு நிகழ்வாக அவள் மூளையைக் கலங்க வைத்தன.
மேசை மீது நடுப்பக்கத்தைப் புரட்டி வைத்திருந்த நோட்டுக் கொப்பி மின்விசிறியின் காற்றுக்கு அசைந்தாடி அவளை ஏமாற்றி விட்டு அடுத்த பக்கம் புரண்டு படுக்கவே எத்தனித்துக் கொண்டிருந்த நேரம், அதைத் தன் கையால் மடக்கிப் பிடித்து நிறுத்தியவள் ஒரு வெற்றிப் புன்னகை சிந்தினாள்.
க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு இன்னும் சில வாரங்களே மீதமிருந்த நிலையில் வெகு தீவிரமாகப் படிக்க வேண்டிய பயங்கரமான இறுதிக் கட்டத்தில், அந்தக் கதிரையில் இழுத்து அமர வைக்கப்பட்டிருந்தாள் அவள்.
குளிரின் வருகையை உணர்ந்த கையிலிருந்த உரோமங்கள் மரியாதை செலுத்தும் நோக்கோடு நிமிர்ந்து நின்று கொண்ட போது, அய்லாவின் கை உடனே மின்விசிறியை அணைத்து விட்டது. அவளது செல்போன் முழுப் போதையில் கட்டிலில் விழுந்து கிடக்கக் கண்டாள்.
ஏதாவது தேவையென்றால் உம்மும்மாவின் செல்போனுக்கு அழைக்குமாறு அஸ்லிடமும் ஹனியாவிடமும் கூறியிருந்தவள், படிக்கும் நேரத்தில் அது மனதை திசை திருப்பாதிருப்பதற்காக சில நாட்களாகவே அதன் உயிரைக் கைப்பற்றி வைத்திருந்தாள்.
YOU ARE READING
பூத்த கள்ளி ✔
Spiritualபதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...