"ஏண்டிம்மா இந்த சின்ன வயசுக்குள்ள குழந்தை பெத்துக்க தெரிஞ்ச உனக்கு அதை பத்திரமா பார்த்துக்க தெரியவேண்டாமோ! எப்போ பாரு வீல் வீல்ன்னு தொண்டை வரண்டு போற அளவுக்கு அழுதிச்சின்னா குழந்தை என்னத்துக்கு ஆகும். பிறக்கும் போது கொழு கொழுன்னு இருந்த குழந்தையை இப்படி எலும்பும் தோலுமா ஆக்கி வச்சிருக்கியே.!" என்று திட்டிக்கொண்டே குழந்தையை ஆட்டி ஆட்டி விளையாட்டு காட்டினார் அம்சா பாட்டி.
"நான் என்ன செய்வேன்? பால் கொடுக்கத்தான் செய்யுறேன்." என்றாள் அனுமித்ரா கவலையுடன்.
அவளை நிமிர்ந்து பார்த்த பாட்டி " நீ முதலில் உன் கோலத்தை மாத்து. இருக்குறது ஈக்கு குச்சி போல. இதுல விலக்குமாத்துக்கு சுற்றிவிட்டது போல இந்த சேலை உனக்கு தேவைதானா? நல்லா கருங்கருன்னு மூடியை இடுப்புக்கு கீழே வச்சுண்டு அதை இப்படியே கொண்டை போட்டே நாசம் பண்ணுறியே! சாயந்திரம் உன் புருஷன் வந்த பிறகு என்னை வந்து பார்க்க சொல்லு. சும்மா சொல்ல கூடாது உன் புருஷனை உன்னையும் வச்சு காலம் தள்ளுரானே! ஆமாம் உன்கிட்ட என்ன இருக்குன்னு அந்த பய இப்படி பிஞ்சா இருக்க உன்னை தள்ளிட்டு வந்திருக்கான். அவனுக்கு அறிவே இல்லை. அவன் இருக்கிற அழகுக்கும், கட்டுமஸ்தான உடம்புக்கும் எப்பேர் பட்ட அழகியை பார்த்திருக்கலாம். போயும் போயும் இந்த சுருங்கி போன சுண்டைக்காய்தான் அவன் கண்ணில் பட்டிச்சா என்ன?" என்றார் கேலியாக.
"அதை அவரிடமே கேளுங்க." என்று குழந்தை வாங்கிக்கொண்டு படியேறியவள் "பாட்டி உண்மையிலேயே நான் பார்க்க ரொம்ப கேவலமா இருக்கிறேனா?" என்று என்று கேட்டாள்.
அவளை பாசத்துடன் பார்த்த பாட்டி "இல்லடிம்மா, நான் சும்மா சொன்னேன். நீ துடைச்சு வச்ச குத்துவிளக்கு போல அழகு. மாசு மரு இல்லாத பால் முகம். வயசுக்கு மீறிய கஷ்டத்தை நீ அனுபவிக்கிறதால உன் முகம் களைச்சு போயிருக்கு அவ்வளவுதான். குழந்தை வளந்துட்டா எல்லாம் சரியாயிடும். இனியாவது உன் புருஷனை கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லு." என்றார் அவர் சிரித்துக்கொண்டு.
YOU ARE READING
கடிவாளம் அணியாத மேகம்
Romanceகடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும்...