அதிகாலை நீல வானை தன் முதல் இளம் கதிர்களால் இளஞ்சிவப்பு நிறமாக மாற்றி, தன் மஞ்சள் முகத்தை உலகிற்கு காட்டியது சூரியன். கதிரவனை வணங்கிவிட்டு பொங்கல் வைக்க ஆயத்தமாயினர் மாறன் குடும்பத்தினர். இளஞ்சூறியன் போலவே மஞ்சள் வண்ண பட்டு புடவையில் சுடரொளியாய் வந்து நின்றாள் மாயா. அவள் கையால் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்தார்கள்.
மாயா விருப்பம் இல்லாமல் அங்கு வந்திருந்த போதிலும் அங்கு வந்த அடுத்த நாளே அந்த கொண்டாட்டங்களை பார்த்து மனம் மாறினாள். அவள் சகோதரிகளோடு சேர்ந்து போட்டிகளையும் ரசித்தாள். மீனா வெற்றி பெற்றதை மனதார கொண்டாடினாள்.
அடுத்ததாக நடந்த ஆண்களுக்கான உறியடித்தல் போட்டியில் மாறனும் பங்கேற்க, அவள் ஆர்வமாக அதை பார்த்துக் கொண்டு இருந்தாள். அவன் கவனமாக நடந்து இறுதியில் உறியை அடித்து போட்டியில் வெற்றி பெற்றான். மாயா அதை ஆச்சர்யமாக பார்த்தாள். "எப்படி யாரும் அடிக்க முடியாததை இவர் இவ்வளவு சுலபமா அடிச்சாரு?" என்று மனதுள் நினைத்துக் கொண்டாள்.
மாயா இரவு உணவு முடித்து தன் அறைக்குள் நுழைந்த போது மாறன் உள்ளே எதையோ தேடிக் கொண்டு இருந்தான். இவள் என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் வெளியே செல்ல முற்பட்டாள்.
"நான் இப்போ போயிடுவேன் மாயா. நீ உள்ள வா" அவள் வெளியில் செல்வதை பார்த்து மாறன் அவளை தடுத்தான். அவளும் எதுவும் பேசாமல் உள்ளே சென்று ஜன்னல் பக்கமாக அமர்ந்துக் கொண்டாள்.
"ஆமா எப்படி அந்த போட்டியில ஜெய்ச்சீங்க!?" அவள் மனதில் இருந்ததை வேறெங்கோ பார்த்தவாறு கேட்டாள். அவள் தன்னிடம் பேசியதை உணர்ந்து அவனுக்கு ஆச்சரியமாகவும் அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. "எந்த போட்டி மாயா?" என்றான் இயல்பாக.
"கண் கட்டிட்டு பானை உடைச்சிங்களே அதான்" என்றாள் அவள் ஆர்வமாக. "அதுக்கு பேர் உறியடி" அவன் சிறு புன்னகையுடன் கூற, "ஓ!!" என்றாள் அவள் விழிகள் விரிய, "உங்க கண் கட்டி இருந்துச்சு அப்புறம் எப்படி சரியா அடிச்சிங்க? கண் கட்டினவங்க சரியா கட்டலயோ?" என்றாள் அவள் கிண்டலாக.
YOU ARE READING
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய்
Romanceஎதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..