1 திருமண கோரிக்கை
சென்னை மாநகரின் சந்தடிகளுக்கு நடுவே, சந்தடியே இல்லாமல், நான்கு புறமும் உயர்ந்து நின்ற மதில் சுவர்களால் சூழப்பட்டிருந்தது அந்த வீடு. அதை வீடு என்று சாதாரணமாய் சொல்லி விட முடியாது...! இரண்டு படுக்கையறை வசதி கொண்ட, ஐம்பது வீடுகளை அதனுள் அடுக்கிவிடலாம். கணினியின் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும், இந்தியாவின் முன்னணி நிறுவனமான இன்ட்காம் மின் முதலாளியின் வீடு என்றால் சும்மாவா?
அந்த வீட்டின் ஒரு விசாலமான அறையில், முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள். அவள் தான் *இன்ட்காம்* முதலாளியின் அக்கா ரேணுகா. ஒரு திருமணத்திற்காக திருச்சி சென்ற அவள், அப்போது தான் சென்னை திரும்பியிருந்தாள். திருச்சியிலிருந்து வந்ததிலிருந்து அவள் இப்படித் தான் இருக்கிறாள். மனதிற்குள் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தாள் அவள்.
அப்போது அவளுடைய மகள் ஷாலினி,
"மாமா... " என்று கூச்சலிடுவது அவள் காதில் விழுந்தது.
ரேணுகா எதிர்பார்த்தபடியே, அவளது அறைக்குள் நுழைந்தான், அவளுடைய தம்பியும், *இன்ட்காமின்* முதலாளியுமான ஆதித்யா. கிரேக்க கடவுளைப் போன்ற உடல்வாகும், அலசி ஆராயும் கண்களும் கொண்ட அவன் முகத்தில் தவழ்ந்த புன்னகை, பார்க்கும் பெண்களின் மனதில் பெரும் புயலை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
ஊருக்கு அவன் கண்டிப்பானவனாக இருக்கலாம். ஆனால், தன் சகோதரியை பொருத்தவரை, அவன் பனிக்கட்டியை போன்றவன். அவளுக்காக எதையும் செய்யக் கூடியவன். எதிலும் வித்தியாசத்தை விரும்புகிறவன்...அதனால், திருமணத்தை விரும்பாதவன்...! கல்யாணம் பண்ணிக்கொண்டு, பிள்ளைகளை பெற்று, பள்ளிக்கு அனுப்பி, அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தோம் என்று வாழும் வாழ்க்கையில் என்ன வித்தியாசம் இருக்கிறது? எல்லோரும் அதைத் தானே செய்கிறார்கள்...!
"ஐ மிஸ் யூ" என்றாள் ரேணுகா.
"அக்கா, நீங்க திருச்சிக்கு போய் நாலு நாள் தான் ஆச்சி" என்றான் கிண்டலாக ஆதித்யா.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.