40 முதல் முத்தம்
பின்னாலிருந்து ஆதித்யாவை கட்டியணைத்து அவனை திக்குமுக்காட செய்தாள் கமலி. ஒன்றும் புரியாமல் அவளை நோக்கி திரும்பிய ஆதித்யா, அவளை மருண்ட பார்வை பார்த்துக் கொண்டு நின்றான்.
"கமலி, என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?"
இல்லை என்று தலையசைத்தாள் கமலி. நிம்மதிப் பெருமூச்சு விட்டான் ஆதித்யா.
"திடீர்னு என்ன ஆச்சு உனக்கு?"
அமைதியாக நின்றாள் கமலி.
"நீ என்னை தொடும் போது கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ண ஆரம்பிச்சிட்ட போலருக்கு..." என்றான் கிண்டலாக.
இன்னும் அவள் தலை குனிந்தபடி தான் நின்றிருந்தாள். அவள் முகத்தை உயர்த்திய ஆதித்யா, அவள் கண்கள் கலங்கியிருந்ததை பார்த்து பதற்றம் அடைந்தான். அவள் கன்னங்களை கையில் ஏந்தி,
"கமலி.. எதுக்காக அழற? நீ என்கிட்ட கம்ஃபர்டபிலா ஃபீல் பண்ணலைன்னா பரவாயில்லை..."
அவளது கன்னங்களில் இருந்து மெல்ல தன் கையை அவன் எடுத்த போது, அவனது கரங்களைப் பற்றி, மீண்டும் தன் கன்னங்களில் வைத்துக் கொண்டாள் கமலி.
"நான் உங்ககிட்ட ரொம்ப கம்ஃபர்டபிலா ஃபீல் பண்றேன் ஆதிஜி... என்னோட அம்மா மடியில் படுத்திருக்குற மாதிரி..." என்று அவள் கூறிய போது, அவள் கண்ணில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
அவள் வார்த்தைகளைக் கேட்டு நெகிழ்ந்து போனான் ஆதித்யா.
அடுத்த நொடி, அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்து, அவனுக்கு மேலும் அதிர்ச்சி அளித்தாள் கமலி. ஆதித்யாவுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும், அவனது கரங்கள் அனிச்சையாய் மேலே எழுந்து, அவளை சுற்றி வளைத்துக் கொண்டன, உலகின் மிகச் சிறந்த பாதுகாப்பு வளையத்திற்குள் அவளை கொண்டு வந்து...
அப்பொழுது ஆதித்யாவின் கைபேசிக்கு ஒரு அழைப்பு வர, அதை அவன் எடுப்பதற்காக அவளது அணைப்பில் இருந்து வெளியே வர முனைந்த போது, அவனை மேலும் இறுக்கி அணைத்து அவனது ஆச்சரியத்தை மேலும் கூட்டினாள் கமலி. அந்த அழைப்பை ஏற்காமல் தவிர்த்து, தனது கைபேசியை சைலன்ட் மோடுக்கு மாற்றினான், அவளது அணைப்புக்குள் இருந்தவாறு. அந்த அழைப்பை ஏற்பதை விட, தனது *கைக்குள்* இருந்த விஷயத்தை கவனிக்க வேண்டிய அவசியம் இருந்தது அவனுக்கு.
YOU ARE READING
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)
Romanceஎல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.