பிரச்சனையில் இருந்து வெளிவந்து அடுத்து என்ன செய்வது என யோசிப்பதற்கும்.. தன் மனதை திடப்படுத்திக் கொள்வதற்கும் தனிமையை தான் நாடுவாள் திவ்யா.
ஆனால் இன்று.. ஆறுதலாக.. அழுத்தமாக பற்றிக் கொண்ட கௌசிக்கின் கரம் அவளுக்கு தேவைப்பட்டது.
கௌசிக் மீது கொண்டுள்ள நேசம் தன்னை பலவீனமாக்குகிறதா.. தெரியவில்லை.. ஆனால் வேண்டும்.. அந்த நேசம் வேண்டும்.. எப்போதும் தனக்கு வேண்டும்.. என தோன்றியது திவ்யாவுக்கு.
ஆதியின் தோளில் சாய்ந்து அமர்ந்து கௌசிக் பற்றியிருந்த தன் கரத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கௌசிக் வந்து தன் கரத்தை இறுக பற்றிக் கொள்ள மாட்டானா என்றிருந்தது அவளுக்கு.
தன் எதிர்பார்ப்பு அதிகமோ.. என தோன்றினாலும்.. வேண்டும்.. கௌசிக்கின் அருகாமை வேண்டும்.. என தோன்றியது.
வசீகரன் மூலமாக நடந்ததை கேள்விப்பட்டு அவன் பெற்றோர் திவ்யா வீட்டுக்கு கிளம்பி வந்தனர்.
கல்யாணி ஒருபுறம் நடந்ததை எண்ணி கண்ணீருடன் புலம்பிக் கொண்டிருக்க.. திவ்யா அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஏன் தான் திவ்யாவுக்கு மட்டும் இத்தனை பிரச்சனைகள் வருகிறதோ என வருந்தினர் சந்திரசேகரும் ரேவதியும்.
பிரதாப் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் பைரவி கோபத்துடன் திவ்யா வீட்டுக்கு வந்தாள்.
“ஏய் திவ்யா.. உன் மனசில என்ன பெரிய இவ ன்னு நினைப்பா.. உன்கிட்ட வந்து மன்னிப்பு கேட்டா போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுப்பீயா..” என சத்தம் போட்டாள்.
“பாவி.. பாவி என் பொண்ணு வாழ்க்கையையே பாழாக்கிட்டு.. அவளையே குறை சொல்றீயா..” என்றார் கல்யாணி.
“உன் பொண்ணு வாழ்க்கை ஏன் பாழாகுது.. அதான் அவளும் ஒரு மூலையில இருந்துக்கட்டும்னு தான சொல்றோம்.. அதில அவளுக்கு என்ன பிரச்சனை..” என அலட்சியத்துடன் பேசினாள் பைரவி.
“ச்சீ.. நீயெல்லாம் ஒரு பொம்பளையா..” என திட்டினர் சந்திரசேகரும் ரேவதியும்.
