"கௌசி.. கௌசி.." உற்சாகமான குரல் கேட்டு புன்னகையுடன் திரும்பினான் கௌசிக்.
ஆதி தான்.. "கௌசி.. கௌசி.." என புன்னகையுடன் அழைத்தபடி குழந்தை போல குதித்துக் கொண்டிருந்தான். அவன் குழந்தை தான்.. மனதால்..
அவனை பார்த்து கையை அசைத்துவிட்டு.. கீழிறங்கினான் கௌசிக்.
"வா ஆதி.. நாம மேல போகலாம்.." என ஆதியின் கைப்பற்றியபடி மாடியை காண்பித்தான் கௌசிக்.
"வேணாம் தம்பி.. அவனுக்கு உயரம்னா பயம்.." என கல்யாணி மறுக்க.. "நான் பார்த்துக்கிறேன் மா.." என உறுதியளித்துவிட்டு அழைத்து வந்தான் கௌசிக்.
ஆதியை தன் வீட்டுக்குள் கௌசிக் அழைத்துவர.. புதுவீடு என்பதால் பேசும் சத்தம் எதிரொளிக்க.. குழந்தை போல கைதட்டி ரசித்தான் ஆதி.
மாடியேற படிக்கு செல்லவும் ரொம்பவும் பயந்து போனான் ஆதி. "ஆதி நான் இருக்கேன்.. வா.. என் கையை பிடிச்சுக்கோ.." என சமாதானம் சொல்லி அழைத்துப் போனான் கௌசிக்.
தன் கையை ஆதி இறுக்கமாக பற்றியிருப்பதிலே ஆதியின் பயத்தை புரிந்து கொண்டான் கௌசிக்.
படியை கடந்து மாடியின் அறைக்குள் ஓடினான் ஆதி உற்சாகமாக. ஆதியின் உற்சாகம் கௌசிக் மனதிலும் இருந்தது.
"பாப்பா.. பாப்பா.. திவு குட்டி.." ஆதி அழைக்க.. அப்போது தான் மாடியில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்த திவ்யாவை பார்த்தான் கௌசிக்.
இந்த நாலைந்து மாதங்களாக இருவருக்கும் இடையில் இயல்பான நட்பை எண்ணிப்பார்த்தான் கௌசிக்.
என் இடம்.. அதை உனக்கு விற்றுவிட்டேன்.. அதை என்ன வேண்டுமோ செய்து கொள்.. என்றில்லாமல்.. வீடு வேலை சம்பந்தப்பட்ட நிறைய உதவிகளை செய்தது திவ்யா தான்.
"இந்த பில்டர்ஸை பாருங்க.. எங்க ஸ்கூல் கரஸ்பாண்டெட் வீடு இவங்க தான் கட்டுனது.. ஸ்கூல்லயும் இப்ப சில பில்டிங்ஸ் கட்டுறாங்க..
உங்களுக்கு பிடிச்சா பாருங்க.. இல்லைனா.. சேகர் மாமா கிட்ட கேளுங்க.. அவங்களுக்கு நிறைய பேரை தெரிஞ்சிருக்கும்.." என பில்டர்ஸை அறிமுகம் செய்தது திவ்யா தான்.
