இரவு உணவுக்காக போனதால் எளிமையான உணவையே ஆர்டர் போட்டிருந்தார்கள் வம்சியும், உதிராவும். அது கூட வேண்டாம் என்று வரவேற்பறையில் இவர்களுக்காக காத்திருந்த ஏஜே இவர்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எழுந்து அந்த ஹோட்டலைவிட்டு வெளியே போனாள். அதை கவனித்த உதிரா
"அத்தான் அவ எங்கேயோ போறா" என்றாள். விஜயேந்திரன் அதை கேட்டது போலவே காட்டிக்கொள்ளவில்லை.
"அத்தான் உங்கிட்டதான் சொல்லிட்டு இருக்கேன்." என்று உதிரா அழுத்தி கூறவும்
"இவன்தான் அவளை ட்ராப் பண்ணுறதா சொல்லியிருந்தான். அவனிடம் சொல்ல வேண்டியதை எதுக்காக என்னிடம் சொல்ற? எனக்கு எதுக்கு ஊர் வம்பு?" என்றான் விஜயேந்திரன்.
"நீயெல்லாம் ஒரு போலீஸ். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு?" என்று உதிரா அரைகுறை சாப்பாட்டில் எழுந்து போக பார்க்க வெளியே போயிருந்த ஏஜே வந்துவிட்டாள். கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட் இருந்தது. சோபாவில் அமர்ந்து அதை பிரித்து சாப்பிட தொடங்கிவிட்டாள்.
"இவ ஏன் இப்படி இருக்கா?" என்று உதிரா வருத்தமாக கேட்க விஜயேந்திரன் அவள் முகத்தை பார்த்துவிட்டு திரும்பி பார்த்தான் ஏஜேவை.
"நீ ஏன் அவளுக்காக கவலைப்படுற? அவதான் சொன்னாலே அவ ஒரு டைப்ன்னு. மறைகழன்ற கேசு அது. நீ சாப்பிடு" என்று கூறிவிட்டு விஜயேந்திரன் எழுந்து கைக்கழுவ போனான்.
"எப்படி பேசிட்டு போறான் பாரு இந்த அத்தான். அந்த பொண்ணு பசியில இருக்கு, இவன் இங்கே வயிறு முட்ட சாப்பிட்டு இருக்கான்." என்று உதிரா கோபத்துடன் கூற
"அவன் எங்கே சாப்பிட்டான்? நீ எல்லாத்தையும் மேலோட்டமா பாக்குற. அவன் பிளேட்டை பாரு. எல்லாத்தையும் எடுத்த மாதிரி இருந்திச்சு. ஆனா அவன் எதையும் ஒழுங்கா சாப்பிடல. உன் அத்தானுக்கு எதுக்காக உன் மேலே இப்படி ஒரு பாசமுன்னு எனக்கு தெரியல. எப்படித்தான் இரண்டு மாசம் உன்னை குன்னூரில் விட்டுட்டு இருந்தானோ! நீ சரியா செட்டில் ஆகுற வரைக்கும் அவன் அவனுடைய மனதில் வேற எதையும் சேர்த்துக்கமாட்டான். அவன் அந்த பெண்ணை காதலிக்கிறானா? இல்லையான்னு எனக்கு தெரியல. ஆனால் அவன் வெளியே பேசுற அளவுக்கு அவள் மேல் அவனுக்கு வெறுப்பு எல்லாம் இல்லை. அவள்தான் இவன் மனசை படிக்க முயற்சி செய்யணும்." என்றான் வம்சி.