கணவனை தவிக்க விட்டுவிட்டு நிம்மதியாக தூங்கும் மனைவியை பார்த்த விஜயேந்திரன்
"பூனை ஐ லவ் யூ" என்றான். மூன்று வருட கல்யாண வாழ்க்கைக்கு பிறகு இவன் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் இப்போதுதான் வருகிறது. இதை இவன் வாயில் இருந்து கூற கேட்க இவன் மனைவி போராடியிருக்கிறாள்.
"நீ வேணா சொல்லிக்க, கேட்டுக்கிறேன். எனக்கு உங்கிட்ட இதை சொல்ல தோணல" என்று கொஞ்சம் இரக்கம் இல்லாமல் சொல்லியிருக்கிறான் இவன் தன் மனைவியை மஞ்சத்தில் சந்தித்த வேளையிலும்.
"எப்போதான் உனக்கு தோணும் கருவாயா? நான் செய்த பிறகா?" என்று அவள் கோபத்தில் வெடித்திருக்கிறாள் பல நேரம். இப்போது இவன் கூற அவள் அசையாமல் இருந்தாள்.
"நான் சொல்றது கேட்குறா என் பூனைக்கு. கண்டிப்பா கேட்கும். ஏன்னா நீ திருட்டு பூனை.
"திருட்டு பூனைக்கு இப்போ நான் ஒரு கதை சொல்ல போறேன். எல்லோரும் தூங்கத்தான் கதை சொல்லுவாங்க. நான் உன்னை தூக்கத்தில் இருந்து எழுப்ப கதை சொல்றேன். கேட்டுட்டு எழுந்திச்சிரனும் சரியா?" என்று கேட்டவன் சிறிது அமைதியாக இருந்துவிட்டு
"ஒரு ஊரில் எந்த ஆசையும், எந்த உணர்ச்சியும் இல்லாத ஒரு மனுஷன் இருந்தானாம். அவனுக்கு பேரு இரும்புன்னு வச்சிக்கலாம். அவன் எப்பவுமே இரும்பாத்தான் இருக்க ஆசைப்பட்டான் அவன் மாமன் மகளுக்காக. அப்படித்தான் இருந்தான். ஆனா அந்த இரும்பை உருக்கியது ஒரு தேவதையின் விலைமதிப்பற்ற இரத்தம். அவ இரத்தத்தை பார்த்த மாத்திரத்தில் அந்த இரும்புக்குள்ளே அத்தனை வருஷம் சேர்ந்து வச்ச கடினதன்மை காணாமல் போச்சு. அது அவனுக்கு புரிஞ்சப்ப அவனுக்கு அந்த தேவதை மேலே ரொம்ப கோபம். அந்த தேவதை கண்ணு பார்க்க ரொம்ப அழகா இருக்கும். அதை இரண்டாவது முறையாக அந்த இரும்பு மனுஷன் பார்த்த போதே அவன் உள்ளே நொறுங்கி போயிட்டான். இன்னொரு முறை அந்த கண்ணை பார்த்தால் பிழைக்கவே முடியாதுங்கிற நிலை வந்ததால ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவ கண்ணை பார்க்கவே மாட்டென்று இருந்தான். அவனுக்கு கடமை பெருசா இருந்ததால இந்த முடிவுக்கு வந்திருந்தான். அந்த தேவதையைவிட்டு அவன் விலகி விலகி ஓட அவனை விடாமல் துரத்தி அந்த தேவதை பல திருட்டு வேலையை எல்லாம் செய்து கடைசியில் அவனை தனக்குள் கொண்டு வந்துட்டா. அவ இல்லாம செத்து போயிடலாம் என்ற நிலை அந்த இரும்பு மனுஷனுக்கு ஏற்பட்ட நேரத்திலும் அதை வெளியே காட்டிக்காம இருந்தானாம் அவன். அவனை படிக்க முயன்று முயன்று தோற்று போன அந்த தேவதை முன்னே இன்னைக்கு அவனே தோற்று போய் நிக்கிறான்.