"நல்லாயிருக்கா உதிரா. உனக்கு இதே மாதிரி ஒன்னு எடுக்க போறேன்." என்றார் சுமித்ரை.
"எனக்கு இதெல்லாம் வேண்டாம்." என்றாள் உதிரா.
"ஏன் நல்லாயில்லையா?" என்று அவர் கேட்க
"நல்லாத்தான் இருக்கு. ஆனா எனக்கு இதெல்லாம் பிடிக்கல." என்றாள் அவள்.
"அப்படி சொல்ல கூடாது" என்று சுமித்ரை பேசிக்கொண்டு இருக்க, வம்சியின் தாயார் 'நான் எடுத்து கொடுக்கிறேனே!' என்று வந்தார். அவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க, சண்டை எல்லாம் முடிந்து நார்மலாகிய போன ஏஜே ஓடி வந்து தகப்பனின் காதில் எதையோ சொல்லிவிட்டு அவரின் போனை வாங்கிக்கொண்டு ஓடினாள். போனவள் கொஞ்ச நேரமாக வராமல் போகவே, விஜயேந்திரன் அவரிடம் விசாரித்தான்.
"அம்மா நான் கிளம்புறேன். அத்தே அவட்ட சொல்லிடுங்க. எங்கே போனா அவ?" என்று கேட்டான்.
"அவ ஒரு டாப்ஸ் எடுத்துட்டு வரேன்னு போனா. இத்தனை நாளா என்னவோ போல இருந்தா. இன்னைக்குத்தான் எனக்கு இது வேணுமுன்னு கேட்டா. அதான் அனுப்பிவச்சேன்" என்றார் அவர்.
"சரி நான் கிளம்புறேன். போனில் சொல்லிக்கிறேன்" என்றவனிடம்
"அவ போனை வீட்டுல வச்சுட்டு வந்துட்டா. அதான் டாப்ஸ் எடுக்க பணம் வேணுமுன்னு என் போனை வாங்கிட்டு போனா. நம்பர் சொல்லவா?" என்று கேட்டார் அவர்.
"இல்ல இருக்கு" என்று கூறிக்கொண்டே அவன் போனை எடுக்க
"எல்லாரு நம்பரும் இருக்கும். அவ நம்பர் மட்டும் இருக்காது" என்று சிரித்தான் வம்சி.
"சும்மா இருக்கியா?" என்ற விஜயேந்திரன் எடுத்த போனை வைத்துவிட்டு
"நான் நேரடியா சொல்லிட்டு போறேன். வம்சி எல்லாத்தையும் சரியா வீட்டுல கொண்டு விட்டுட்டு போ. ஜாக்கிரதையா போங்க சரியா. பார்த்துக்க வம்சி. உதிரா.." என்றான் கிளம்பிக்கொண்டே.
"பார்த்துக்குறேன்" என்றாள் அவள். அவனைப்பொருத்தமட்டிலும் உதிரா எல்லாவற்றையும் சரியா செய்கிற ஒரு பொறுப்புள்ள பெண். அவளை யாரும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை, இவளே எல்லோரையும் பார்த்துக்கொள்வாள். அதனால் வம்சியிடமும், உதிராவிடமும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, கல்யாணத்துக்கு ஷாப்பிங் வந்துவிட்டு, பொறுப்பே இல்லாமல் டாப்ஸ் பொறுக்க சென்றவளை தேடி போனான். இத்தனை நாள் இல்லாமல் இன்று எந்த டாப்ஸ் அவளை இப்படி இழுத்திருக்கு என்று பார்க்கவும் இவனுக்குள் சிறு ஆவல். கண்டிப்பாக இடுப்பை மறைக்கிற டாப்ஸ்சாக இருக்காது என்று நினைத்துக்கொண்டே சென்றான் அவன்.