"இதுக்குள்ள முடிஞ்சிடிச்சா?" என்று ஆச்சரியப்படும் வம்சியை யாரும் அறியாத வண்ணம் இடித்தாள் உதிரா சும்மா இருக்கும்படி.
"எப்படிடி இதெல்லாம் இதுகளால முடியுது. இப்போதான் கேமிராமேன் தலையை பிச்சுக்குற அளவுக்கு முகத்தை திருப்பிகிட்டு நின்னுச்சிக. அதுக்குள்ள ராசியாகி வந்ததும் இல்லாமல், எதுவுமே நடக்காதது போல சிரிச்சிட்டு இருக்குதுக. இதுக இரண்டுக்கும் தலையில் எதுவும் அடி பட்டிருக்குமா? இல்ல டிசைனிங்கே இப்படியா?" என்றான் வம்சி உதிராவின் எச்சரிக்கையை கண்டுக்கொள்ளாமல்.
"கண்ணு வைக்காதிங்க. கோபம் இருக்கிற இடத்தில்தான் குணம் இருக்கும். என் அத்தான் ரொம்ப நல்லவன். கொஞ்சம் கோபக்காரன். அதை புரிஞ்சிக்க அவளுக்கு கொஞ்ச நாள் ஆகும். அதுவரை இப்படித்தான் இருக்கும்." என்றாள் உதிரா.
"ஒரு வேலை உள்ளே கூட்டிட்டு போய் காலில் விழுந்திருப்பானோ!" என்றான் வம்சி இன்னும் நம்பிக்கை இல்லாமல்.
"என் அத்தான்...." என்று உதிரா ஆரம்பிக்க
"ஏய் சும்மா சும்மா அவனை என் அத்தான்னு சொல்றதை நிறுத்து. உனக்காக ஒருத்தன் இங்கே உயிரை வெறுத்து காத்திருக்கேன். என்னை ஒரு தடவையாது ஏதாச்சும் உறவு முறை சொல்லி கூப்பிட்டு இருப்பியா? பெரிய அத்தான். அப்படி என்னத்தை அத்தானோ! வெறும் அத்தானும் இல்லை, கூடவே ஒரு அடைமொழி வேற 'என்' ன்னு." என்றான் வம்சி கோபப்படுவது போல சீறிக்கொண்டு. பதிலுக்கு இவளுக்கு கோபம் வரவில்லை. அவனையே சில நொடிகள் பார்த்தவள் பட்டென்று சிரித்துவிட்டாள்.
"என்ன சிரிப்பு?" என்று அவன் அதற்கும் முகத்தை காட்ட
"என் வசிக்கு நடிக்க சுத்தமாகவே தெரியல." என்றாள் அவள் 'என்'னில் ஒரு அழுத்தம் கொடுத்து. அவள் தன்னை கண்டுக்கொண்டதில் அவனுக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
"நானும் கொஞ்ச நேரம் அதுகளை போல சண்டை போட்டு பார்க்கலாமுன்னு நினைச்சேன், முடியலையே!" என்றான் வம்சி.