"இப்போ போலீஸ்க்கார மாப்பிளை வருவாரா? மாட்டாரா. அவர் வர நேரமாகுமுன்னா இவங்க நிச்சயதார்த்ததை நடத்தி முடிச்சிடலாம். அவரு வரும் போது வரட்டும்" என்று ஒரு பெரியவர் கூற மூன்று குடும்பத்தாருக்கும் அதில் துளியும் விருப்பம் இல்லை. ஜோடிகள் இரண்டு என்றாலும் அவர்களின் பிணைப்பு ஒன்றுதான். ஏஜே உதிராவிடம் சற்று முகத்தை காட்டினாலும் செய்கை அப்படி இருக்காது. அவளுக்கு உதிராதான் சிறந்த வழிகாட்டி. விஜயேந்திரனை திட்டினாலும் இவளிடம்தான் திட்டிவிட்டு போவாள், அவன் மேல் காதல் பொங்கி வழிந்தாலும் இவளிடம்தான் சொல்லிவிட்டு போவாள், புலம்புவதாக இருந்தாலும் இவளிடம்தான் புலம்பிவிட்டு போவாள். உன்னை எனக்கு பிடிக்காது, ஆனாலும் நீதான் எனக்கு குறை தீர்க்கும் குலதெய்வம் என்பது போல ஏஜேவின் எண்ணம்.
ஆண்கள் இருவரையும்பற்றி சொல்லவே வேண்டாம். வார்த்தை போர் நடந்திக்கொண்டாலும் இருவருக்கும் இடையே ஆழமான நட்பு இருக்கத்தான் செய்தது. உதிரா தனக்கு ஒரு வாழ்க்கையே வேண்டாம் என்று நின்ற தனது பிடிவாதத்தை விட்டுவிட்டு விஜயேந்திரனுக்காகவும், ஏஜேவுக்காவும் இறங்கி வந்தாள். உதிராவுக்கு தன் மேல் காதல் இருக்கிறது, அதனால் அவள் எப்படியாவது திருமணத்திற்கு சம்மதித்தால் போதும் என்று வம்சி நினைத்துக்கொண்டான். இதை வைத்தாவது உதிராவின் வாழ்வில் புதிதாக ஒரு தொடக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என்று விஜயேந்திரன் நினைத்துவிட்டான். இந்த மாதிரி எந்த வித காரணமும் இல்லாமல் காதலுக்காக மட்டுமே காதலை கரம்பிடிப்பவள் இந்த ஏஜே.
மாப்பிளை வர நேரமாகிக்கொண்டே போகிறது என்று ஏஜேவின் பெற்றோர் கலக்கத்தில் கையை பிசைந்துக்கொண்டு இருக்க அவர்கள் பெற்ற பாக்கியவதி ஜொலிக்கும் அலங்காரத்துடன் தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள்.
"கொஞ்சமாவது கவலை இருக்கா பாரு அவளுக்கு. இந்த பொண்ணை என் வீட்டுக்கு மருமகளா கொண்டு வர வேண்டிய தலையெழுத்து நமக்கு" என்று சுமித்திரை தலையில் அடித்துக்கொண்டார். உதிராவுக்கு தன் அத்தையின் பேச்சு வருத்தத்தை கொடுத்தது. உதிராவுக்கு ஏஜேவின் காதலும் தெரியும், விஜயேந்திரன் அவளை உதாசீனப்படுத்துவதும் தெரியும். புகுந்த வீட்டில் எல்லா உறவுகளும் நன்றாக அமைவது சாத்தியம் இல்லாததுதான். ஆனால் கொண்டவன் துணை இருந்தால் எதையும் சமாளிக்கலாம். இங்கு அதுக்கும் பஞ்சமே! மாமியாரும் எதற்கு எடுத்தாலும் குற்றம் கூறினால் அந்த பெண்ணின் கதி என்ன இந்த வீட்டில். அவளின் பெற்றோருக்கும் பேசும் திறமை இல்லை. மாப்பிளை வீட்டார் என்ன சொன்னாலும் தலையாட்டும் ரகம். இந்த மாதிரியான சூழ்நிலையை அந்த பெண் எப்படி சமாளிப்பாள் என்று கவலைக்கொண்டாள் உதிரா.