29 வசீகரனின் வருகை

2.6K 118 4
                                    

29 வசீகரனின் வருகை

துப்பட்டாவை பற்றிருந்த ஐஸ்வர்யாவின் கரம், மேலும் இறுகியது. வேறு ஒரு பெண்ணின் பெயர் அடுத்த பக்கத்தில் இருந்துவிட்டால், என்ன செய்வது என்ற எண்ணமே அவளைக் கொன்று தின்றது. அவளை அறியாமலேயே, அனிச்சையாக அவளுடைய கண்கள் கண்ணீரை சொரிந்தன. மீனாட்சி கேட்ட கேள்வி அவள் மனதில் இடி என ஒலித்தது.

உன்னுடைய இடத்தில் வேறு ஒரு பெண்ணை உன்னால் நினைத்து பார்க்க முடியுமா?

தன்னுடைய இடத்தில் வேறொரு பெண் என்றால், தன்னிடம் அன்பைப் பொழிவது போலவே, வசீகரன் அவளிடத்திலும் அன்பைப் பொழிவான். தன்னைப் போலவே, அவளிடத்திலும் வம்பு செய்வான்... கட்டி அணைப்பான்... முத்தமிடுவான்... ஆனால், அந்த பெண், ஐஸ்வர்யா அவனை தடுப்பது போல், அவனை தடுக்க மாட்டாள்.

அவள் இதயம், துடிக்க படாதபாடு பட்டது. அதை, யாரோ பிடித்து அழுத்துவது போல் இருந்தது.

ஆனால், வேறு ஒருத்தி அவனுடைய வாழ்க்கையில் வருவது பற்றி இவள் ஏன் கவலைப்பட வேண்டும்? இவள் தான் அவனை விட்டு விலக வேண்டும் என்று நினைக்கிறாளே...! இவள் அவனை விட்டு விலகிய பின், அவன் ஏன் தனித்து இருக்க வேண்டும்? அவன் சந்தோஷமாக இருக்க தகுதியற்றவனா என்ன? உண்மையில் கூறப்போனால், அவனுக்குரிய சந்தோஷத்தை அளிக்க வேண்டிய கடமை ஐஸ்வர்யாவினுடையது. ஆனால், அதை அவள் எப்பொழுதும் செய்ததில்லை.

தறிகெட்டு ஓடிய தனது இதயத்துடிப்பை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தாள் ஐஸ்வர்யா. மெதுவாக கடைசி பக்கத்தை திருப்பியவள், நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

"கவலை கொள்ளாதே என் இனிய இதயமே, உன் கடைசி துடிப்பு வரை, ஐஸ்வர்யா உன்னுடன் தான் இருப்பாள்...!"

கட்டிலின் மீது தொப்பென்று அமர்ந்தவள் ஓவென்று அழுதாள். அவள் அழுகை சிரிப்பாக மாறியது. அவள் கையிலிருந்த கை குறிப்பேட்டை அழுத்தமாய் முத்தமிட்டாள். அவளுக்கு என்ன தேவை என்பதை, அவள் புரிந்து கொண்டுவிட்டாள். அவளுடைய இடத்தை வேறு யாருக்கும் விட்டுத்தர அவள் தயாராக இல்லை. அவள் வாழ்க்கையிலிருந்து வசீகரன் செல்வதை அவளால் அனுமதிக்க முடியாது. வசீகரனின் வாழ்வில் ஐஸ்வர்யா எப்படி இன்றியமையாவளோ, அதே போல் ஐஸ்வர்யாவுக்கும் வசீகரன் இன்றியமையாதவன், அவளுடைய உயிர் மூச்சை போல!

அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது )Where stories live. Discover now