7

2.6K 111 6
                                        

முகங்கள்

சென்னையின் மிகப்பெரிய மேலாண்மைக் கல்லூரிகளில் "Wisdom institute of management "ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்றாலும், குறுகிய காலத்திலேயே அதீத வளர்ச்சி கண்ட அக்கல்லூரி, தற்போது இந்தியாவின் தலைசிறந்த ஐம்பது தொழில் மேலாண்மைக் கல்லூரிகள் பட்டியலில் இடம் பிடித்துவிட்டது.

மஹிமாவுக்காக ராஜகோபால் தேர்ந்தெடுத்தது அந்தக் கல்லூரி தான். தன் மகளுக்கு அனைத்தும் சிறந்ததாகவே அமையவேண்டும் என மெனக்கெடுபவர், கல்லூரியை மட்டும் விடுவாரா என்ன? தனது நிறுவன மேலாளர்கள் அனைவரையும் கருத்துக் கேட்டு, ஆராய்ந்து, ஆயிரம் கல்லூரிகளை சலித்தெடுத்து, அதில் சிறந்ததென இதைத் தேர்ந்தெடுத்தார். மஹிமாவும் கேட்டதுமே சம்மதம் தெரிவித்துவிட்டாள்.

கல்லூரியும் மஹிமாவின் மதிப்பெண்களைக் கண்டவும் அவளைக் கைநீட்டி அழைத்துக்கொண்டது. ஏற்பாடுகள் எல்லாம் முடிந்து, முதல்நாள் கல்லூரிக்குச் செல்லவும் தயாராகி வந்தாயிற்று.

தன் மகள் வருங்காலத்தை நோக்கி எட்டுவைத்துச் செல்ல, அவள் கேட்டின் உள்ளே செல்லும்வரை பார்த்துவிட்டு, திருப்தியுடன் நகர்ந்தார் அவர்.

மஹிமா கல்லூரியை சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே மெதுவாக நடந்து சென்றாள். முந்தைய நாளே அவளைத் தொடர்புகொண்டு 'administration block' வந்து தனது வகுப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர் நிர்வாகத்தினர். அதை நினைவில் கொண்டு அவள் அந்தக் கட்டிடத்தைத் தேடிக்கொண்டு நெருங்க, அங்கே தெரிந்தது...

பல ஆண்டுகள் பரிச்சயமான முகம்... நாள்தோறும் பார்த்துப் பார்த்துப் பழகிய முகம்.

ஆம். விஷ்வாவேதான்!

மஹிமாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

யாரும் கவனிக்கிறார்களா என்றுகூடத் திரும்பிப் பார்க்காமல், ஓடிச்சென்று அவனிடம் நின்றாள் அவள். முகத்தில் ஆச்சரியம், மகிழ்ச்சி, பரபரப்பு. அனைத்தையும் விட குழப்பமும் கேள்விகளும்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now