14 பதற்றம்
மைதிலியின் முகம், புன்னகையுடன் மலர்ந்தது, ரோஜா பூவுடன் நிலவன் வந்த போது. அதை, ஆர்த்தியிடம் நீட்டி, அவளுக்கு ஏமாற்றம் அளித்தான் நிலவன். ஆனால் அவனது அடுத்த வார்த்தைகள், அவள் இழந்த புன்னகையை மீட்டுக் கொடுத்தது.
"ஹாப்பி மதர்ஸ் டே, ஆர்த்தி"
"எனக்கு மதர்ஸ் டே விஷஸா? ஏன்?" என்றாள் ஆர்த்தி.
"ஆமாம்... ஏன் உனக்கு மதர்ஸ் டே விஷஸ் சொல்றேனா, நம்ம எல்லாரும், ஃபர்ஸ்ட் நார்மல் டெலிவரி கேஸை அட்டென்ட் பண்ண அன்னைக்கு நீ என்ன சொன்னேன்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"
"என்ன சொன்னேன்?"
"நீ மறந்திருந்தா, உனக்கு நான் ஞாபகப்படுத்துறேன்"
அன்று நடந்ததை அவளுக்கு நினைவூட்டினான் நிலவன்.
அன்று...
அவர்கள் தங்களது முதல் சுகப்பிரசவ செயல்முறை படத்திற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். யாழினியன், மகேந்திரன், மற்றும் கதிரவன் ஒரு குழுவிலும், ஆர்த்தியும், மைதிலியும் ஒரு குழுவிலும், நிலவன் வேறு குழுவிலும், வானதி மற்றும் ஒரு குழுவிலும் பிரிக்கப்பட்டு இருந்தார்கள்.
யாழினியன், மகேந்திரன் மற்றும் கதிரவன் மூவரும் முதல் குழுவில் இருந்ததால், ஏற்கனவே சென்று விட்டிருந்தார்கள். ஆர்த்தியும், மைதிலியும் தங்கள் முறைக்காக அழைக்கப்பட்டார்கள்.
முக கவசமும், கையுறையும் அணிந்து கொண்டு இருவரும் பிரசவ அறைக்குள் நுழைந்தார்கள். இது தான் முதல் முறை, குழந்தையை பெற்றெடுக்க, ஒரு தாய் படும் பாட்டை அவர்கள் நேரில் காண்பது. உலகத்தின் மிகக் கொடுமையான வலியில் துடித்துக் கொண்டிருந்த அந்த அம்மாவை பார்த்த போது, அவர்களுக்கு கண்கள் கலங்கியது. அவர்கள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.
அவர்களது குழுவை வழிநடத்திய தலைமை மருத்துவர் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கி கூறி, அதை ஆரத்தியை செய்யுமாறு உத்தரவிட்டார். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் மெல்லிய கத்தியை பற்றிய ஆரத்தியின் கரம் நடுங்கியது. சரியாக குழந்தையின் தலை தென்படும் நேரம், அவள் அம்மாவின் சதையை கத்தியால் கிழித்துவிட்டு, குழந்தை சிரமமின்றி வெளியில் வர, வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அவள் அப்படி செய்யும் போது, குழந்தைக்கு எந்த காயமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பது மிக முக்கியம். ஏற்கனவே வலியால் கதறி துடித்துக் கொண்டிருக்கும் அந்த அம்மாவிற்கு மேலும் வலியை ஏற்படுத்த வேண்டியது, தவிர்க்க முடியாத ஒன்று. ஆர்த்தியின் கண்களில் கட்டிய கண்ணீர், அனைத்தையும் மங்கலாக காட்டியது. கண்களை கசக்கி பிழிந்து, கண்ணீரை ஓட விட்டு, பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு தயாரானாள். அம்மாவின் சதையை கிழித்து, வெளியே வந்து விழுந்த, அந்த குழந்தையை தன் கரங்களில் ஏந்தினாள். தன் அம்மாவின் ரத்தத்தை போர்வையாய் போர்த்திக் கொண்டிருந்த இளம் உயிரை பார்த்த போது அவள் மனம் கனத்துப் போனது. பத்து மாதம் அந்த குழந்தைக்கு உயிரூட்டி வளர்த்த, தொப்புள் கொடியை கத்தரித்து, குழந்தையை அம்மாவிடமிருந்து பிரித்தெடுத்தாள்.
YOU ARE READING
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️
Romanceமூடப்பட்ட கதவின் மீது சாய்ந்து கண்களை மூடி நின்றான் யாழினியன், தன் உள்ளம் வென்ற பாரதியை எண்ணியபடி. ஆரத்தி தான், யாழினியனுக்கு எல்லாமாய் இருந்தவள். ஆனால் அது அவளுக்கு தெரியாது... இல்லை இல்லை, அவன் அவளுக்கு தெரிய விட்டதில்லை. ஆரத்தி ...! தன் மனதின் அ...