33 சகோதரர்கள்

1.5K 80 7
                                    

33 சகோதரர்கள்

காசோலை குறித்து பூங்குழலி திருப்தி அடைந்து விட்டாள். ஆனால் சிவகாமியால் திருப்தி அடைய முடியவில்லை. அவருக்கு தன் கணவனை பற்றி நன்றாகவே தெரியும். தில்லைராஜன் எதையுமே அவரிடம் இருந்து மறைத்ததில்லை, விஷயம் எவ்வளவு கடுமையானதாய் இருந்தாலும் சரி. அப்படி இருக்கும் போது, தனது சேமிப்பு குறித்து அவர் எப்படி அவரிடம் கூறாமல் போனார்?

உணவருந்த அனைவரும் உணவு மேஜையில் கூடினார்கள். மகிழனும், கீர்த்தியும் கூட அங்கு வந்தார்கள். சிவகாமியை கண்ட மகிழன் சங்கடத்திற்கு உள்ளானான். ஆனால் சிவகாமியோ அவனை சட்டை செய்யவே இல்லை. அதை மலரவன் கவனித்தான். அனைவருக்கும் உணவு பரிமாறி விட்டு, மின்னல்கொடியும், பூங்குழலியும், தத்தம் கணவர்களின் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்கள்.

"எனக்கு தில்லையை நெனச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. எவ்வளவு யோசனையோட இருந்திருக்கான் பாரு" தில்லைராஜனை வாயார புகழ்ந்தார் மணிமாறன்.

அவர் ஏன் அப்படி கூறினார் என்று மகிழன் ஒருவனைத் தவிர அனைவரும் புரிந்து கொண்டார்கள். அந்த காசோலை குறித்த விவகாரம் நடந்த போது அவன் வீட்டில் இல்லை அல்லவா? அவன் குழப்பம் அடைந்தான். தன் குடும்பத்தை நிராதரவாய் விட்டுச் சென்ற ஒரு மனிதனைப் ஏன் தன் தந்தை புகழ்கிறார்? எல்லாவற்றையும் தான தர்மம் செய்து ஒழித்து அழித்த மனிதனைப் பற்றி புகழ என்ன இருக்கிறது? அவனுக்கு புரியவில்லை.

"கடைசியில, சிவகாமியும், பூங்குழலியும் கோடீஸ்வரங்களா ஆயிட்டாங்க" என்றார் மணிமாறன் வேண்டுமென்றே.

பூங்குழலியை ஒன்றும் இல்லாத பிச்சைக்காரி என்று கூறி  நிராகரித்ததற்காக, அவர் மகிழனை வேண்டுமென்றே குத்திக் காட்டுகிறார் என்று மலரவனும் புரிந்து கொண்டான்.

பூங்குழலிக்கு சங்கடமாய் போனது. ஏனென்றால், அவரது உள்நோக்கத்தை அவளும் புரிந்து கொண்டாள்.

"ஆமாம்பா, தில்லை அங்கிள் பத்து கோடி ரூபாயை டெபாசிட் பண்ணி வச்சிருப்பாருன்னு நான் நினைச்சு கூட பாக்கல. இந்த பணத்தை அவர் எப்படி மறந்து போனாருன்னு தெரியல" என்றான் மலரவன், 'கையில காலானா இல்லாத உனக்கு ஏன் இவ்வளவு கோபம்?' என்று பூங்குழலியை கேட்ட கீர்த்தியை கவனித்தவாறு. 

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)Where stories live. Discover now